புதுடெல்லி: 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிவில் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி, ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உணர்ச்சிபூர்வமாக முறையிட்ட சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை விளக்கும்போது, அவர் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி காட்டிய சம்பவம் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் இன்றி நேரடியாக ஆஜரான அந்தப் பெண், "15 ஆண்டுகளாக இந்த வழக்கால் எங்கள் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும், கல்விச் செலவுகளைச் சமாளிக்கவும் முடியவில்லை. இயல்பான வாழ்க்கையே வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து அவர் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி காட்டியதால், நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அவரது கோரிக்கையை கவனமாகக் கேட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்கு அடுத்த திங்கட்கிழமை சிறப்பு அமர்வில் பட்டியலிடப்படும் என்றும், நேரில் வர வேண்டிய அவசியமின்றி காணொலி வாயிலாக ஆஜராகலாம் என்றும் தெரிவித்தார். மேலும், அவரது தரப்பு வாதத்தை முழுமையாகக் கேட்க தேவையான நேரம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையில், அந்தப் பெண் குறிப்பிட்ட வழக்கு சஹாரா (Sahara) குழுமத்தின் சொத்துகள் விற்பனை தொடர்பான சிவில் வழக்கு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், வழக்கு எண், மனுதாரரின் பெயர், வழக்கின் முழுமையான பின்னணி உள்ளிட்ட விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் நீண்டகாலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையின் முக்கிய சவால்களில் ஒன்றாக இருந்து வருகிறது. "தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்" என்ற சட்டக் கோட்பாடு பரவலாக மேற்கோள் காட்டப்பட்டாலும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பொருளாதார, சமூக மற்றும் மனநல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் தொடர்கிறது.
பழைய வழக்குகளை விரைவுபடுத்தும் உச்சநீதிமன்றம்!
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் நான்கு சிறப்பு அமர்வுகளை அமைத்துள்ளார். சுமார் 800 பழைய வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து முடிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது, வழக்காடிகளை பாரபட்சமின்றி அணுகி நீதி வழங்குவதற்கான அடையாளமாகும்; நீதியை தாமதப்படுத்துவதற்கான குறியீடல்ல. ஹைதராபாத் பெண்ணின் உணர்ச்சிபூர்வ முறையீடு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை நீதித்துறையின் கவனத்திற்கும், பொதுச் சமூகத்தின் விவாதத்திற்கும் கொண்டு வந்துள்ளது.