தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாளில், அவரது புகழ் திக்கெட்டும் பரவட்டும்!
முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவர். கலை, இலக்கியம், அரசியல், ஆட்சி நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர்.
சுமார் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். 1957 முதல் 2016 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்தவர். அனல் பறக்கும் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் தனி முத்திரை பதித்தவர்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்திற்கு ஏறத்தாழ 50 ஆண்டுகள் அசைக்க முடியாத தலைவராகப் பணியாற்றியவர். அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் தன்னிகரற்ற பெருந்தலைவராக வலம் வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தியவர். பேருந்துகள் நாட்டுடைமையாக்கம், குடிசை மாற்று வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநிலத் திட்டக் குழு உருவாக்கம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு, உழவர் சந்தைகள், வருமுன் காப்போம் திட்டம், திருமண உதவித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, சத்துணவில் முட்டை, இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.
பொதுவாழ்வில் பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த சமூகநீதி உணர்வைப் போற்றி, அண்ணா வழியில் அயராது உழைத்து அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.
வாழும்போதே வரலாறாகத் திகழ்ந்து, மறைந்த பின்னரும் தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ், இவ்வையகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
கலைஞரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்! புகழ் ஓங்கட்டும்!