ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள மில்மேடு–காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர். கவின் பிரசாந்த். வணிகவியல் இளங்கலை (B.Com.) பட்டம் பெற்ற விவசாயத் தம்பதிகளான ஆர். இரவி – ஆர். இராஜேஸ்வரி ஆகியோரின் மூத்த மகனான இவர், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பங்கேற்கும் JEE (Joint Entrance Examination) நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 968-வது ரேங்க் பெற்று, இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னையில் இயந்திரவியல் (B.Tech./B.E. Mechanical Engineering) படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
உலகின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஐஐடி சென்னை, 1959-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசால், மேற்கு ஜெர்மனியின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது. சென்னை கிண்டியில் 620 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் சேர்வதற்காக ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தகைய கடுமையான போட்டியில், கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கவின் பிரசாந்த் வெற்றி பெற்றிருப்பது, திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தப் பின்னணியும் தடையாக இருக்காது என்பதை நிரூபித்துள்ளது.
சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையம் ரேங்க் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் பயின்று வரும் கவின் பிரசாந்த், எட்டாம் வகுப்பு முதலே பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறார்.
கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாய் பவுண்டேஷன் நடத்திய Science Talent Examination தேர்வில் 2017-ஆம் ஆண்டு பள்ளி அளவில் முதலிடமும், ஒட்டுமொத்த போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றார். தொடர்ந்து 2018–19-ஆம் ஆண்டில் மாநில அளவில் இரண்டாம் இடமும், 2020-ஆம் ஆண்டு AglaSem நிறுவனம் தேசிய அளவில் நடத்திய திறனறிவுத் தேர்வில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்தார்.
மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நடத்திய Young Scientist Programme (YUVIKA) தேர்வில் சுமார் 3 லட்சம் போட்டியாளர்களில் 49-வது இடம் பெற்று, ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தைப் பார்வையிடுவதோடு, அறிவியல் பயிற்சி முகாமிலும் பங்கேற்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண்களும், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வில் 720-க்கு 582 மதிப்பெண்களும் பெற்று, கல்வியின் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது தங்கை தாரண்யா, தற்போது பதினொன்றாம் வகுப்பில் பயின்று வருகிறார்.
கவின் பிரசாந்தின் இந்தச் சாதனையைப் பாராட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுன்னி, ஐ.ஏ.எஸ். நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இளம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் இந்தச் சாதனைக்கு, கல்வியாளரும் தாளாளருமான கே.என். ரங்கராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு. பழனிச்சாமி, சென்னை வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தலைவர் எஸ். இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், சத்தியமங்கலம் அம்மா பேரவை செயலாளர் என். பவுல்ராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.