வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் – சென்னை சார்பில் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கட்டபொம்மன் அகாடமி, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்த வரிசையில், அகாடமியின் மாணவியான பி. கனகா, இரண்டாவது முறையாக குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று, தமிழக அரசின் பில் கலெக்டர் பணிக்கு தேர்வாகியிருப்பது, அகாடமிக்கும் சங்கத்திற்கும் மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் அவர்கள் ஆடு, மாடு வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகளான பி. கனகா, திரு. சிவப்பெருமாள் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற இலக்கை விடாமல் தொடர்ந்து முயற்சி செய்த கனகா, 2023-ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தொடங்கப்பட்ட "கட்டபொம்மன் அகாடமி"யின் முதல் ஆண்டு மாணவியாக இணைந்தார்.
அகாடமியின் வழிகாட்டுதலின் கீழ், கனகா மற்றும் பிற மாணவர்களுக்கு சென்னை நகரிலுள்ள முன்னணி தனியார் பயிற்சி மையத்தில் குரூப் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பாடவாரியான வழிகாட்டுதல், மாதிரி தேர்வுகள், தனிப்பட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி ஆதரவுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சியின் பலனாக, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 மற்றும் குரூப்-2A முதன்மைத் தேர்வுகளில் கனகா வெற்றி பெற்றார். குரூப்-4 தேர்ச்சி அடிப்படையில் வனத்துறை பாதுகாவலர் (Forest Guard) பணிக்கான தேர்வுப் பட்டியலிலும் இடம்பிடித்தார். இருப்பினும், தாம் விரும்பிய துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த இலக்குடன் அந்த வாய்ப்பை ஏற்காமல், மீண்டும் குரூப்-4 தேர்வை எழுத முடிவு செய்தார்.
தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் தேர்வை எதிர்கொண்ட கனகா, இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முந்தையதை விட அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, 09.12.2025 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பில் கலெக்டர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான நியமன ஆணையைப் பெற்றுக் கொண்ட அவர், சேலம் மாவட்டத்திலுள்ள பேரூராட்சியில் பில் கலெக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார். விரைவில் அவர் தனது அரசுப் பணியைப் பொறுப்பேற்க உள்ளார்.
குடும்பப் பொறுப்புகளையும் போட்டித் தேர்வுத் தயாரிப்பையும் சமநிலைப்படுத்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று, தாம் விரும்பிய அரசுப் பணியை அடைந்திருக்கும் பி. கனகாவின் வெற்றி, கட்டபொம்மன் அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்த வெற்றியை முன்னிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், கட்டபொம்மன் அகாடமி தேர்வுக்குழுத் தலைவர் பி. இராமராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு. பழனிச்சாமி, மற்றும் தேர்வுக்குழு உறுப்பினரும் அமைப்புச் செயலாளருமான ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் கனகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சமூக முன்னேற்றத்தின் கல்விப் பாலமாக கட்டபொம்மன் அகாடமி!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் உருவாக்கிய கட்டபொம்மன் அகாடமி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி, சரியான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தை வழங்கி வருகிறது. கனகாவின் வெற்றி, தனிநபர் சாதனையாக மட்டுமல்லாமல், சமுதாய இளைஞர்களை அரசுப் பணிகளுக்கு உருவாக்கும் கட்டபொம்மன் அகாடமியின் நோக்கமும் செயல்பாடும் சரியான திசையில் பயணித்து வருவதற்கான உறுதியான சான்றாக அமைந்துள்ளது.
அரசுப் பணிகளில் அதிகமான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற சங்கத்தின் கனவை நனவாக்கும் வகையில், கட்டபொம்மன் அகாடமி இனியும் பல வெற்றிக் கதைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை இந்த சாதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.