மேட்டுக்கடையில் விடுதலைக்களம் கட்சியின் கொடி பறக்குது!
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்திலுள்ள மேட்டுக்கடை கிராமத்தில் விடுதலைக்களம் கட்சியின் கொடியேற்று விழா மேற்கு மாவட்டச்செயலாளர் ஆர்.நடராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜ் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அப்பொழுது சமுதாய இளைஞர்கள் கல்வியறிவு பெற்றால் மட்டுமே போதாது, ஒழுக்கமும், சுயகட்டுப்பாடுகளும் மிக அவசியம். வளர்ந்துள்ள சமுதாயங்களின் பறந்துபட்ட பார்வையை உள்வாங்கிக்கொண்டு சமுதாயத்தை அடையாளப்படுத்தி, சமுதாய மக்களையும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, பொருளாளர் சின்னுசாமி, தந்துவாடம்பட்டி தங்கவேலு, கூடச்சேரி அப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு வன்னியர் 10.5 விழுக்காட்டால் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ-மாணவியர் இந்தக்கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கிப்பேசினர். மேலும் இச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையான விளக்கங்களை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பின் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் திரு.பூவரசிராஜேந்திரன், சி.பாலசுப்பிரமணி, தபால் கோபால் மற்றும் தூசுர், பாலப்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.