தொட்டிய நாயக்கர்களுக்கு தேனி,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் DNT சான்றிதழ் வழங்குக! போராட்டம் அறிவிப்பு.
ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட மறுத்து எதிர்த்து போராடியயவர்கள், கிளர்ச்சி, கலகங்களில் ஈடுபட்ட சமுதாயங்களை குற்றப்பரம்பரை சட்டத்தின் மூலம் கைது செய்து கொடுமைப் படுத்தினர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றிய காலங்களில் கம்பளத்தார் சமுதாயம் தமிழகத்தில் இருந்த 72 பாளையங்களில் 50-க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆட்சி செய்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், எத்திலப்ப நாயக்கர் உள்ளிட்ட பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேயர்கள் அவர்கள் சார்ந்த கம்பளத்தார் சமூகத்தை குற்றப்பரம்பரைகளாக அறிவித்து சித்திரவதை செய்தனர். இந்திய விடுதலை அடைந்தபொழுது இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு கருணை காட்டும் நோக்கில் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல சலுகைகளை அளித்துச்சென்றனர்.
தேசவிடுதலைக்குப்பின் "போர்க்குடிகளாக" அறிவிக்கப்பட்ட இச்சமுதாயத்தினருக்கு தொடர்ந்து பல சலுகைகளை இந்திய அரசு வழங்கிவருகிறது. தமிழகத்தில் சீர்மரபினர் என்று அழைக்கப்படும் இப்பட்டியலில் சில சாதிகள் மாவட்ட எல்லை வரையரைப்படி பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வாழும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதை கண்டிக்கும் வகையிலும் இம்மாவட்டங்களில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கும் DNT சான்றிதழ் வழங்கக்கோரி விடுதலைக்களம் கட்சியின் சார்பில் வரும் 29-ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், டிசம்பர்-6 ஆம் தேதி மதுரையிலும், டிசம்பர் 13-ஆம் தேதி திண்டுக்கல் ஆட்சியர் அவுவலகம் முன்பும் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அறிவித்துள்ளார்.