கம்பளத்தாரை வம்பிழுக்கும் போக்கு!-கரூரில் தொடரும் அவலம்!
கரூர் மாவட்டம் வெள்ளியனை மேட்டுப்பட்டியில் நமது கம்பளத்து சமுதாய மக்கள் மீது தமிழ்ப்புலிகள் அமைப்பின் தூண்டுதலின் பேரில் சமூகவிரோதிகள் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்கிராமத்தில் வாழும் கம்பளத்தார் சமுதாய ஆண்களும், பெண்களும் தங்கள் விவசாய நிலங்களுக்கும், கூலிவேலைக்கும் சென்று திரும்புகையில் குடிபோதையிலுள்ள சிலர் வழிமறித்து தகாத வார்த்தைகளில் பேசுவதாக தெரிகிறது. பலநாட்களாக நடந்து வரும் இதுபோன்ற தகராறை, சம்பவத்தன்று கம்பளத்தார்கள் சிலர் ஒன்றுகூடி தட்டிக்கேட்டதாகவும், இதற்காகவே காத்திருந்தது போன்று உடனடியாக காவல்துறையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கம்பளத்தார்கள் மீது புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தினர் இன்று காலை மாநில தலைவர் ஆர்.வரதராஜன் (முன்னாள் எம்.எல்.ஏ) தலைமையில் சம்பவம் நடைபெற்ற மேட்டுப்பட்டியில் விசாரணை மேற்கொண்டபின், காவல்துறையினர் கம்பளத்தார்களின் மீது பதிந்துள்ள பொய்வழக்கை கண்டிக்கும் வகையில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கம்பளத்தார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வெள்ளியனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப்புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் பாண்டியன், மாவட்ட தலைவர்கள் சத்திய மூர்த்தி, செல்லக்காமு உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் இதேபோன்று ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் வெங்கல் கிராமத்தில் கம்பளத்தார் மீது வன்கொடுமை சட்டத்தில் பொய்வழக்கு போடப்பட்டதை எதிர்த்து விடுதலைக்களம் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேட்டுப்பட்டி சம்பவத்திற்கு விடுதலைக்களம் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கம்பளத்தார் சமூகத்தோடு ஒன்றிணைந்து கம்பளதேசத்திலிருந்து வந்த தெலுங்குமொழி பேசும் சகோதர சமூகம், தமிழகத்தில் போலி தமிழ்தேசியவாதிகளால் தெலுங்குமொழி பேசுவோர் மீது பகையுணர்வை தூண்டப்பட்டு வரும் சூழலில், கம்பளத்தாரோடு மல்லுக்கட்டுவது இருதரப்பிற்கும் நல்லதல்ல என்பதை இதுபோன்ற சம்பவங்களுக்கு பின்னனியில் இருப்பதாக சொல்லப்படும் தமிழ்புலிகள் அமைப்பினர் உணரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
தகவல் உதவி: எம்.ஆர்.விஜயகுமார், கொக்கம்பட்டி.