தொட்டிய நாயக்கர்களுக்கு DNT சாதி சான்றிதழ் வழங்கக்கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு கட்டுப்பட மறுத்து எதிர்த்து போராடியவர்கள், கிளர்ச்சி மற்றும் கலகங்களில் ஈடுபட்ட சமுதாயங்களை 1871-இல் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தின் மூலம் கைது செய்து ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றிய காலங்களில் கம்பளத்தார் சமுதாயம் தமிழகத்தில் இருந்த 72 பாளையங்களில் 50-க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆட்சி செய்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், எத்திலப்ப நாயக்கர் உள்ளிட்ட பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேயர்கள் அவர்கள் சார்ந்த கம்பளத்தார் சமூகத்தை குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்தனர். இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் முன் தங்கள் கொண்டுவந்த குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு கருணை காட்டும் நோக்கிலும், அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் பொருட்டும் பல சலுகைகளை அளித்துச் சென்றனர்.
தேசவிடுதலைக்குப்பின் அனந்த சயனம் அய்யங்கார் தலைமையில் ஆணையத்தை அமைத்த இந்திய அரசு, நாடு முழுவதும் குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை அடையாளம் கண்டு "போர்க்குடி பழங்குடிகளாக" அறிவிக்கப்பட்டு, இச்சமுதாயத்தினருக்கு தொடர்ந்து பல சலுகைகளை இந்திய அரசு வழங்கிவருகிறது. தமிழகத்தில் இப்பிரிவினரை "சீர்மரபினர் சமுதாயம்" என்று அழைக்கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள சீர்மரபினர் சமுதாய பட்டியலில் 20 மாவட்டங்களில் வசிக்கும் தொட்டிய நாயக்கர்களை இப்பட்டியலில் சேர்த்துள்ளது. இது 1949-இல் அமைக்கப்பட்ட அனந்த சயனம் அய்யங்கார் ஆணையத்தின் அறிக்கைக்கு எதிரானது. இந்திய அரசுக்கு அப்பொழுது வழங்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கையின்படி மதராஸ் மாகாணம் முழுவதும் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரை "சீர்மரபின பழங்குடிகள்" என அடையாளப்படுத்தியுள்ளது. ஆனால் பின்னர் வந்த தமிழக அரசு எந்த ஆதாரமும், புள்ளிவிபரமும் இல்லாமல், மாவட்ட எல்லை வரையரைப்படி "சீர்மரபின பழங்குடிகள்" பட்டியல் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வாழும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதை கண்டிக்கும் வகையிலும், இம்மாவட்டங்களில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கும் DNT சான்றிதழ் வழங்கக்கோரியும் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், டிசம்பர்-6 ஆம் தேதி மதுரையிலும் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வரும் திங்கள்கிழமை டிசம்பர் 13-ஆம் தேதி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சௌந்திரபாண்டியன், செல்லப்பாண்டியன், அழகர்சாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்வர் என்று விடுதலைக்களம் கட்சி அறிவித்துள்ளது.