கட்டபொம்மனை மறந்த முதல்வர்! மரியாதை செலுத்திய ஆளுநர்! - சிறப்பு தொகுப்பு-3
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் கடந்த திங்களன்று 03.01.2022 தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் மாளிகையில் மாவீரன் பிறந்தநாள் சிறப்பாக இந்தமுறை கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் திரு.ரவி அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார். தமிழக ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ரவி அவர்கள் கடந்த மாதம் கயத்தாறில் உள்ள மாவீரன் நினைவிடத்தில் குடும்பத்துடன் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து தற்பொழுது பிறந்தநாளிலும் ஆளுநர் அவர்கள் கட்டபொம்மனுக்கு ஆளுநர் மாளிகையில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளது கம்பளத்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தியதாக தெரிய வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் இருந்த அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருந்துறையில் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய நிலையில் இந்த பிறந்தநாளில் தமிழக அரசு தரப்பிலிருந்து முதல்வர் அமைச்சர் பெருமக்கள் யாரும் இந்தமுறை கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.