🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு!- உச்சநீதிமன்றத்தில் திடீர் திருப்பம்!

வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை கடந்த நவம்பர் ஒன்றாம்தேதியன்று ரத்து செய்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடைகோரியதும், அதை  உச்சநீதிமன்றம் நிராகரித்ததும் அறிந்ததே. அப்பொழுது மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் எழுத்துப்பூர்வமான வாதங்களை பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை பிப் 15,16 தேதிகளில் நடைபெறும் என்றும், யாரும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக்கோரக்கூடாது என்றும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்தியது.

இதற்கிடையே வழக்கில் தங்கள் தரப்பு நியாயங்களை கேட்கவேண்டும், காலாவகாசம் வேண்டும் என்று ஒருசிலர் முயற்சித்ததையும் அதை நீதிமன்றம் நிராகரித்து, முன்பு குறிப்பிட்டது போலவே நேற்று முன்தினம் 15-ஆம் தேதி வழக்கு விசாரனை தொடங்கியது. அதில் திடீர் திருப்பமாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிசேக்சிங்வி தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில், இந்த வழக்கை மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதனையடுத்து விசாரணையின் துவக்கத்திலேயே அதுகுறித்து முதலில் முடிவு செய்துவிட தீர்மானித்த நீதிபதிகள், இதுகுறித்த வாதங்களை முன்வைக்க வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டனர். அப்பொழுது பேசிய சிங்வி தன் முந்தைய கருத்தையே வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அடுத்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், இந்த அமர்வே விசாரிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அரசு தரப்பில் ஆஜரான முகில் ரோத்தகி, திவேதி ஆகியோரும் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசின் சார்பில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது.

நமது தொட்டியநாயக்கர் உள்ளிட்ட சாதிகளின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அரசியல் சாசனம் குறித்து பல கேள்விகளை உயர்நீதிமன்ற எழுப்பியிருந்தாலும், ஏற்கனவே  உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் இதற்கான விடைகளை அளித்திருப்பதால் இந்த இரண்டு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்றார். அரசுதரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் எம்.என்.ராவ் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஒரே மனுதாரருக்கு ஆஜரான வழக்கறிஞர்கள் மத்தியிலேயே இருவேறு கருத்துகள் நிலவிய நிலையில் வழக்கை நாளை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் வழக்கின் நிலை என்னவாகுமோ என்ற பதற்றம் பலருக்கும் தொற்றிக்கொண்டது.

ஆனால் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியவுடனே பேசிய நீதியரசர் நாகேஷ்வரராவ் , வழக்கு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை என்றும் தாங்களே இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாகவும் கூறி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கியதை ஆதரித்து பல கருத்துக்களை முன்வைத்தார். அதேபோல் பாமக தரப்பில் ஆஜரான வைத்தியநாதன் வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைவிட மிகவும் பின்தங்கியுள்ளதாக சில புள்ளிவிபரங்களைக்காட்டி வாதிட்டார்.

ஏறக்குறைய 43 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர் தரப்பிலேயே இன்னும் பல வழக்கறிஞர்கள் ஆஜராகவுள்ளனர். அதன் பின்னர் நமது தரப்பில் ஏறக்குறைய 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பதில் வாதங்கள் வைக்கவுள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீதியரசர் நாகேஷ்வரராவ்,பி.ஆர்.கவாய் அமர்வு மீண்டும் வரும் செவ்வாய்கிழமை 22-ஆம் தேதி கூடுவதால் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று மீண்டும் வழக்கறிஞகள் வாதங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியிருந்தாலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்றாலும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும். இப்பொழுதே கூடுதலாக அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத்தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க ராஜீவ் தவான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டதால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவை இருப்பதால் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமை நமக்கு பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved