வெளியாகிறது வன்னியர் இடஒதுக்கீடு இறுதி தீர்ப்பு!
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் 8/2021-ஐ சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தன.
உச்சநீதிமன்ற நீதியரசர்கள் நாகேஷ்வரராவ், கவாய் அமர்வில் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இருதரப்பு ஆவணங்களையும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இறுதிவிசாரணை நடைபெறுமென்று கூறி வழக்கை தள்ளிவைத்தது. அதன்படி வழக்கு விசாரணை பிப்ரவரி 15-இல் தொடங்கி 22-ஆம் தேதிவரை நடைபெற்றது.
விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனையடுத்து நேற்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட பட்டியலில் வன்னியர் இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. இறுதி விசாரணை நடைபெற்ற ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாவதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.