அனுமதி மறுத்த காவல்துறை! நீதிமன்றத்தில் தொடரும் வெற்றி!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நடத்தி வெற்றிகண்டுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட வன்னியர் அல்லாத பிற எம்பிசி சமுதாயங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாதபடி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன.
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள உண்மைக் காரணங்களை மறைத்து ஒருசில தவறுகளை சரிசெய்துகொண்டால் மீண்டும் வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த இருநாட்களாக அரசியல் கோரிக்கைகள், சந்திப்புகள் நடந்துவருகின்றன.
இதனை எதிர்கொண்டு முறியடிக்க தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தமிழக முதல்வர் நமது பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து வருவதைத் தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்க மாற்று வழிகளைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நியாமான முயற்சிகள் நிராகரிக்கப்படுவதால் போராட்டம் மட்டுமே நமக்கு தீர்வாக உள்ளது. அதற்கும் தடைபோடும் தமிழக அரசு மதுரை பழங்காநத்தத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தப்படவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுத்துள்ளது.
எனவே திட்டமிட்டபடி உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திட நீதிமன்றக் கதவுகளை தட்ட வேண்டிய சூழல் நமக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று தொடரப்பட்ட அவசர வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திமுக, அதிமுக அரசுகள் எளிய மக்களை மாறிமாறி வஞ்சித்தாலும் நீதிமன்றப் போராட்டங்களிலேயே தொடர்ந்து முறியடித்து வருவது நாம் நியாயத்தின் பக்கம் நிற்பதை உறுதி செய்கிறது.