கம்பளத்தார் மீது காட்டுமிரண்டித் தாக்குதல்! சூறையாடப்பட்ட வீடுகள்!
விருதுநகர் மாவட்டம் கே வாகைகுளம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் கம்பளத்தார் சமுதாயத்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் திருச்சுழி அருகே உள்ள கே வாகைகுளம் கிராமத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் மீது நேற்று (15/4/2022- வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி அளவில் சமூக விரோதிகள் சிலரால் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த சமூக விரோத செயலை விடுதலைக்களம் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதோடு, இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைக்களம் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் கே வாகைகுளத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் விடுதலைக்களம் கட்சி வலியுறுத்துகிறது.
இச்சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க நாளை (17/04/2022) காலை 11 மணி அளவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ நாகராஜன் கே வாகைக்குளம் கிராமத்திற்கு செல்லவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிய வன்முறைகளில் கம்பளத்தார் சமூகம் தாக்குதலுக்கு உள்ளாவது சமீப காலங்களில் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்யவேண்டியது அவசியம். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.