கரூரில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி, ஏகாம்பரம் உள்ளிட்ட மூவர் ஜாமீனில் விடுதலை!
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி அருகேயுள்ள ஜல்லிவாடநாயக்கனூர் மந்தையில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்கப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வந்த அரசு அதிகாரிகளை தடுத்தாகக்கூறி கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி, ஏகாம்பரம் மற்றும் இளங்கோவன் ஆகியோர் இன்று காலை திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.
முன்னதாக கடந்த 15-ஆம் தேதி போலீசார் இம்மூவரையும் அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்த நடவடிக்கை மிகுந்த அதிர்வலையை உண்டாக்கியது. கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கடுத்து வார விடுமுறை நாட்களாக அமைந்ததால் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று திங்கள் கிழமை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜாமீன் பெறப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கின் மூலகாரணமாக உள்ள கரூர் புதிய பேருந்துநிலையத்தை தோரணக்கல்பட்டியில் அமைக்க உத்தரவிடக்கோரியும், அகதிகள் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடமுடியாது என்றுகூறி நேற்றைய விசாரணையின்போது நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கடந்த 2011 முதல் கரூர் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. இதனைமையப்படுத்தி நடக்கும் அரசியல் வேறு வேறு வடிவங்களில் எதிரொலித்து வருவது கரூர் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளது.