🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சுதந்திர இந்தியா கண்ட முதல் நேர்மையான முதல்வர் ஓமந்தூரார்!

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், தமிழகத்தில் அப்போதைய தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் 01.02.1895-இல் பிறந்தவர். தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தவர் பின் சட்டம் பயின்றார். மிக இளம்வயதிலேயே காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, இறுதிவரை காந்தியவாதியாகவும் வாழ்ந்தவர்.

ராஜாஜி-காமராஜர் ஆகிய இருவரின் ஆதரவுடன் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராகப் பதவியேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். ஓமந்தூராருக்கு முன்னர் சென்னை மாகாணத்தை ஆட்சிசெய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஓமந்தூரார் 1947-ம் ஆண்டு, மார்ச் 23 முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை இரண்டாண்டுகள் மட்டுமே பதவி வகித்தார்.

ஆனால் இந்தக்குறுகிய காலத்தில் ஓமந்தூரார் செய்த அற்புதங்களும், அதிரடிகளும் வரலாற்றில் ஓமந்தூராரின் புகழை காலத்தால் வெல்லமுடியாத வெற்றிச்சரித்திரம் ஆக்கியது. ஓமந்தூரார் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்டதுதான். இதற்கு முன்வரை ஜமீன்தார்களும், அரசகுடும்பத்தினரும், செல்வந்தர்களும் முதல்வர் பதவியை அலங்கரித்திருந்ததால், மன்னர் ஆட்சியின் அத்துனை பகட்டுகளும் தொடர்ந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமந்தூரார் முதல்வர் பதவியில் இருந்தபோது கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகையையோ, வேலைவாய்ப்பையோ அவர் வழங்கியதில்லை. மிக மிக அவசியமான தருணங்களில் மட்டுமே பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். தனிப்பட்ட பேட்டிகள், புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்கவே முடியாது. முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், "என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும்?" என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை, தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக் கொண்டவர் ஓமந்தூரார். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.

ஓமந்தூரார் ஆட்சிகாலத்தில் தான் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தைக்கொண்டுவந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க, 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததை தகர்த்தெரிந்து, ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்கவைத்ததோடு,  திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனை.

பட்டியலின மக்களுக்கு அந்தக் காலத்தில் தனித்துறை இல்லை. தொழிலாளர் நலத்துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அந்தத் துறையை "ஆதிதிராவிடர் நலத்துறை" எனப் பெயர் மாற்றம் செய்து, தனித்துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஓர் ஆணையரை நியமித்தார். எனவே, இன்றைக்கும் "ஆதிதிராவிட நலத்துறையின் தந்தை" என்றழைக்கப்படுகிறார்.

"அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதிதிராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்" என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான். ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கானத் தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்கவைத்த பெருமைக்குரியவர் அவரே.

மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள் அனைவரும் ஆங்கிலேய ஐ.சி.எஸ் அதிகாரிகளாகவே இருந்ததை மாற்றி, ஐ.சி.எஸ் அந்தஸ்து இல்லாத ஏ.அழகிரிசாமி என்பவரைத் தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக்கொண்டதுதான். சென்னை மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்களில் முதல் தமிழர் என்ற பெருமைக்குரியவர் ஏ.அழகிரிசாமி. பின்னாட்களில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றியவர் ஓமந்தூரார். பாகிஸ்தானிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று படேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன் பின்னர், அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.

ஓமந்தூராருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. பக்கத்து மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் இருந்ததால், அந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லாமல் இருந்தது. ஓமந்தூரார் முதலமைச்சரானதும் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 25 மாவட்டங்களைக்கொண்ட சென்னை மாகாணம் முழுவதிலும் ஒரே நாளில் கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓமந்தூரார். "மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ எனக்குத் தரக் கூடாது" என்றும், "வெளிநாட்டிலிருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது" என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி அவர்.

ஓமந்தூராரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான சட்டங்களான ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் போன்றவை தமிழக சமூக அரசியல் வரலாற்றை புரடிப்போட்ட சட்டங்கள் என்றால் மிகையல்ல.

அவரின் நேர்மையான ஆட்சியால் பாதிப்படைந்த ஜமீன்தார்களும், மடாதிபதிகளும், சில அரசியல்வாதிகளும் இணைந்து அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கத் தீவிரம் காட்டியதன் விளைவாக, சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் பதவியைத் துச்சமென தூக்கியெறிந்தார். பதவி விலகிய அன்று பிற்பகலிலேயே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையிலிருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான ஓமந்தூருக்குச் சென்றுவிட்டார். 

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஓமந்தூரார் அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்தார். இதையடுத்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டு, வள்ளலார் வாழ்ந்த வடலூரில் வசிக்கத் தொடங்கினார்.

ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் தனது மரபார்ந்த விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர் பகுதியிலிருந்த தரிசு நிலங்களையெல்லாம் விளைநிலங்களாக மாற்றினார். இன்று அணையா ஜோதியாக வெளிச்சம் வீசும் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஓமந்தூரார் ஏற்படுத்தினார்.

25-8-1970 அன்று தனது 75-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமான ஓமந்தூராரின் 52-வது நினைவு நாள் இன்று. நேர்மையின் சிகரமான ஓமந்தூராரின் புகழ் வடலூரில் ஏற்றிய அணையா ஜோதிபோல் என்றெண்றும் பட்டொளி வீசும். அன்னாரின் புகழ் ஓங்குக!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved