மத்திய அரசின் மோசடியைக் கண்டித்து தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மக்களை ஏமாற்றும் வகையில், மோசடியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை 3 மணியளவில் நாமக்கல் பூங்க சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட சமுதாய தலைவர்களும், சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிற சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசுப்பணிகளில் 90 சதவீதமான இடங்களை ஆக்கிரமித்துள்ள உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது, நமது இலையிலுள்ள சோற்றை எடுத்து தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கும் மோசடியான செயல். பசித்தவன் பலபேர் இருக்க புளிச்ச ஏப்பக்காரன் வாயில் மீண்டும் மீண்டும் திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்க, மக்கள் அரசியல் விழிப்புணர்வும், போராட்ட குணத்தை பெறுவதுமே ஒரே வழி.
அனைவரும் ஒன்றுதிரண்டு முறியடிக்க சமூகநீதி கூட்டமைப்போடு கரம் கோர்க்க வாருங்கள் உறவுகளே. இன்றைய நமது போராட்டமே நாளை நம் சந்ததியினர் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ வழிவகுக்கும்