🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாகிறது! நியாயம் நிலைநிறுத்தப்படுமா?

உயர்ஜாதி ஏழைகள் அல்லது முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பில் ஏழைகள் (EWS) எனப்படுவோருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்திய பாஜக அரசு வழங்கி இருக்கும் 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதான் சமூக நீதி என்பதால் இந்திய அரசியல் சாசனமும் இதனை உறுதி செய்கிறது. இந்திய அரசியல் சாசனம் முதன் முதலாக திருத்தப்பட்டது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காகதான். அதுவும் தமிழகத்தில் தந்தைப்பெரியார் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் தான் அரசியல் சாசன சட்ட திருத்தத்திற்கு அடிப்படையாக இருந்தது.

மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது மண்டல் கமிஷன் அறிக்கை. ஆனால் இந்த இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினர் எனப்படும் முற்பட்ட வகுப்பினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதனை எதிர்த்து உயர்ஜாதி எனப்படுகிற முற்பட்ட வகுப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி தீக்குளித்த கொடுமையும் இதே இந்தியாவில்தான் அரங்கேறியது. இடஒதுக்கீடுக்கு எதிராக எத்தனையோ சட்டப் போராட்டங்களை வழக்குகளை நடத்தி வருவதும் முன்னேறிய அல்லது உயர்ஜாதியினர்தான்.

ஆனால் காலம் மாற மாற உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு கோரினர். இதனடிப்படையில்தான் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியான பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளோருக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.

இடஒதுக்கீடு அளவானது 50%-த்தை தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ள நிலையில், மத்திய அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த இடஒதுக்கீடு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. தொடர்ந்து ஒருவாரகாலம் நடந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் நீதிபதிகள். இதற்கிடையே, தலைமை நீதிபதி யு.யு.லலித் நாளை (8-ஆம் தேதி) ஓய்வு பெரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved