குழந்தையின் அங்கீகாரம்! நலச்சங்கத்தின் வெற்றி!
கோவை மாவட்டம், குளத்துப்பாளையத்தை சேர்ந்த திரு.மாரிமுத்து-திருமதி.. தம்பதியரின் மகள் மா.ஸாத்விகா. தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வரும் செல்வி. சாத்விகா பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வமுடையவர். பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை பரிசுகளை வென்றுள்ளார்.
சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் செயல்பாடுகளையும், www.thottianaicker.com இணையதளத்தில் இடம்பெறும் செய்திகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து கவனித்துவரும் செல்வி.சாத்விகா-விற்கு சமுதாயத்தின் மீது தீராத பாசமும், பரிவும்.
இந்நிலையில், நேற்று (20.11.2023) குளத்துப்பாளையத்தில் முப்பெரும்விழா, புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்திருந்த இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் வசம் ரூ.10001/- (ரூபாய் பத்தாயிரத்து ஒன்று மட்டும்) நன்கொடை வழங்கினார்.
குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக சங்கங்கள் பாடுபட்டு வரும் நிலையில், சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சுய விருப்பத்தாலும், திறமையாலும் பரதநாட்டியக்கலை கற்று பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தான் ஈட்டிய வருவாயின் ஒரு பகுதியை சமுதாயத்திற்காக மனமுவந்து வழங்கிய செல்வி.சாத்விகா வின் உயர்ந்த உள்ளத்தை தலைவர்கள் பலரும் பாராட்டினர்.
இரவு,பகல்,வெயில் மழை என்றும் பாராமல், கால்கள் கடுகடுக்க, வியர்வை சிந்திட, ஆடல் கலைகளிலேயே சற்று கடினமான பரதக்கலையை பயின்று, அதன் மூலம் கிடைத்த நிதியை, சமுதாயத்தினரோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் தன் பங்களிப்பை அளிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட குழந்தை சாத்விகா, இதற்காக சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை தேர்வு செய்து, அதன் மூலம் தனது விருப்பத்தை நிறைவேற்ற எடுத்துள்ள முடிவு, சங்கத்தின் 15-ஆண்டுகால செயல்பாட்டிற்கும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கிய உயர்ந்த அங்கீகாரம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
செல்வி.சாத்விகா போன்ற எண்ணற்ற நன்கொடையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக இச்சங்கம் தொடர்ந்து உழைத்திட உறுதியேற்கிறோம்.