உறவுகளை ஒன்றிணைத்த சங்கம்! ஆரத்தழுவி அன்பு பாராட்டி மகிழ்ந்த தருணம்!
கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கிளை துவக்கவிழா நேற்று நடைபெற்றது. ஆனைமலை வட்டம் சின்னப்பம்பாளையம் மற்றும் இராமச்சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விழாவிற்கு ஒடையகுளம் பேரூராட்சி மு.தலைவரும், பெருநிழக்கிலாருமான R.B.பூபதி மற்றும் இராமச்சந்திராபுரம் அரண்மனையார் ஆனந்தராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோவை மாவட்ட வரலாற்றில் சுப நிகழ்ச்சிகளிலும், துக்க காரியங்களிலும் உறவினர்களாக கலந்துகொள்வதைத் தவிர, சமூகமாக ஓரிடத்தில் அமர்ந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டதோ, சமுதாய மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டதோ இல்லை என்ற நிலையை கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் மாற்றியமைத்துள்ளது. ஊர் பெரியோர்களின் ஒத்துழைப்போடும், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலோடும் இளைஞர்களும், பெண்களும், படித்தவர்களும், பண்பாளர்களும் இதுவரை இருந்துவந்த பிணக்குகளையும், மனமாச்சரியங்களையும் மறந்து ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொண்டதும், ஆரத்தழுவிக்கொண்டதும் நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடக்கு மாவட்டம் குளத்துப்பாளையம், கோவைப்புதூர் மற்றும் ஆறுமுகக்கவுண்டனூர் பெரியோர்களும், இளைஞர்களும் துவக்கி வைத்த இந்த இணைப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்வது சமுதாய மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தொலைவும், நெடுங்காலமும் பயணப்படவேண்டிய பயணத்தின் தொடக்கப்புள்ளியாக உள்ள இந்த முயற்சியும், நிகழ்ச்சியும் தொடர்ந்து செயல்பட்டு சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே சமுதாய பற்றாளர்கள் மற்றும் பெரியோர்களின் விருப்பமாக உள்ளது.
இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இம்முயற்சி தொடர்ந்து சரியான திசையிலும், பாதையிலும் பயணித்து இலக்கை அடைவதில் சுணக்கமின்றி செயல்பட்டு, வரலாற்றுச் சதனைகளை நிகழ்த்திட வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வாழ்த்துகிறது.