மாவீரனுக்கு மதுரையில் மரியாதை ! அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகை!
அ.தி.மு.க சார்பில் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளான ஜனவரி 3-ஆம் தேதியன்று முன்னாள் அமைச்சர்கள் ஐவர் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக நியூஸ் ஜெ-டிவியில் இன்று மாலை செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் கே.டி.இராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ,ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் முன்னாள் எம்.பியும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழு மதுரையில் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாவீரனின் பிறந்தநாள், நினைவு நாட்களில் முறையே மதுரை மற்றும் கயத்தாரில் கழகத்தின் சார்பில் தலைமைக்கழக நிர்வாகிகளைக் கொண்டு மரியாதை செலுத்துவதற்குறிய நிரந்தர நிலையாணையை வெளியிடக்கோரி அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கலாநிதி மற்றும் விருதுநகர் மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் கண்ணன் ஆகியோர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.