ஊரெங்கும் உற்சாகம்! தெருவெங்கும் கோலாகலம்!
பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாளான இன்று மிகுந்த எழுச்சியோடு சீறும் சிறப்புமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் கடந்த ஆண்டைவிட மிகச்சிறப்பான திட்டமிடல்களையும், ஏற்பாடுகளையும் பல்வேறு அமைப்புகளும், இளைஞர் குழுக்களும் செய்துள்ளது தெரியவருகிறது.
264-வது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக நேற்றே தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் கட்டபொம்மன் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று முதல்நிகழ்வாக காலை எட்டுமணிக்கே அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்திலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மாவீரனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை நிறுவன தலைவர் பி.வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாவீரனுக்கு புகழ்மாலை சூட்ட வருகைதரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்டம் பிராந்தகம் மேட்டுக்கடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இராமமோகன்ராவ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.