சென்னை மாநகர துணைமேயருடன் சந்திப்பு!
சென்னை மாநகர துணைமேயர் சைதை.மகேஷ்குமார் அவர்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் இன்று மாலை ரிப்பன் மாளிகையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப்பேசினர். இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி'29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னை மாநகர துணைமேயர் மகேஷ்குமார் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் துணைமேயர் வாழ்த்துரை வழங்க தயாராக இருந்தார். ஆனால் இறுதியாக விழா பேருரையாற்ற இருந்த தலைமை விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள், விமான நிலையம் செல்ல வேண்டியிருந்த காரணத்தால் முன்னதாகவே தலைமை உரையாற்றினார். சம்பிரதாயப்படி மூத்த அமைச்சரும், நிர்வாகியுமான தலைமை விருந்தினர் முன்னதாகவே உரையாற்றிவிட்டபடியால், ஜூனியர் அமைச்சரான பி.கே.சேகர்பாபு, துணைமேயர் ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்க இயலவில்லை. மேலும், அமைச்சர்களை வழியனுப்பச் சென்ற துணைமேயருக்கு நினைவுப்பரிசு வழங்கமுடியாமல் போனது..
இதனையடுத்து, இன்று மாலை ரிப்பன் மாளிகையில் துணைமேயர் அலுவலகத்தில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் சென்ற இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வணக்கத்திற்குறிய துணைமேயர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி, விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அப்போது பேசிய துணைமேயர் கூட்ட ஏற்பாடுகள் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது என்றும், விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்ததாக தெரிவித்தார்.