🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் பதவியை இழந்த வி.பி.சிங்-க்கு முழுவுருவ சிலை!

முன்னாள் இந்தியப் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பிரச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வி.பி சிங் 1969 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வென்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர், ஒன்றிய வர்த்தக அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார் வி.பி.சிங் அவர்கள்.  பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அதனால்தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் B.P. மண்டல் தலைமையிலான ஆணையம் சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, B.P மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள்

அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங் அவர்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது 'முற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது' என்று அமைச்சர் ஒருவரே சொன்ன போது இதோ இப்போதே தேதியைச் சொல்கிறேன் என்ற கம்பீரத்துக்குச் சொந்தக்காரர்- வி.பி.சிங் அவர்கள். அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. "சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது" என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் சுயமரியாதைச் சுடரொளி வி.பி.சிங் அவர்கள். 

பதவியிலிருந்த 11 மாத காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தொடக்கப்புள்ளி, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தொடக்கப் புள்ளி வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது. தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிட வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் வி.பி சிங் அவர்கள். 

தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் அவர்கள் நினைத்தார். தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.  ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது அவமானம்' அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் சுயமரியாதை என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரளைப் போல மதித்தார்.  "எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் அவர்கள் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்" என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள். 

இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது. தி.மு.க உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தாள். அதனை மனதில் வைத்துத்தான் அகில இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூலமாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும்பாலான கட்சிகள் அதில் பங்கெடுத்தன. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்று அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.  தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண் தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டின ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவகம்பீரச் சிலை அமைக்கப்படும்  என்பதை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

பல நூற்றாண்டுகாலமாக சுரண்டப்பட்டு வரும் மக்கள் தொகையில் 70 விழுக்காடுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் எதிரே நின்றபோதும், ஆட்சியையே பறிகொடுத்து 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு சின்னையில் சிலை அமைக்க முன்வந்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved