🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஏன் மதிமுக தமிழகத்தின் அரசியல் தேவை? திருமுருகன் காந்தியின் பார்வை

திமுக விலிருந்து விலக்கப்பட்ட வைகோ-வால் 1993 இல் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 30 ஆண்டுகால பயணத்தில் கடும் சரிவுகளை சந்தித்துள்ளது. இக்கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்தாலும், தனி சின்னம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கட்சித் தலைமையோடு கருத்துவேறுபாடு கொண்டுள்ள கட்சியின் அவைத் தலைவராக உள்ள திருப்பூர் துரைசாமி மதிமுக வை திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைசாமியின் பேச்சை நிராகரித்துள்ள பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் தொண்டர்கள் தனித்து செயல்படுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், வாக்கு அரசியலில் வெற்றியைக்குவிக்காத மதிமுக தமிழக அரசியலுக்கு ஏன் தேவை என்பதை மே 17 இயக்கத்தி ஒருங்கிணைப்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

வெற்றி தோல்வி மட்டுமே ஒரு இயக்கத்தின் வரலாற்று இருப்பை உறுதி செய்துவிடாது. அரசியல் போக்கில் தாக்கத்தை கொண்டுவருவதில் அதனுடைய பங்கை பொறுத்தும், எத்தகைய மாற்றத்திற்காக போராடுகிறது என்பதுவுமே அதன் முக்கியத்துவத்தை சொல்லும். 

மதிமுக என்பது உருவாகி கடந்த 30 ஆண்டுகளில் அது வலியுறுத்திய அரசியலே அதனை பிற திராவிட கட்சிகளில் இருந்து வேறுபடுத்தியது. 90களில் கூர்மையடைய ஆரம்பித்த ஈழப்போராட்டம், தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் எனும் சூழலில் உருவான மதிமுக, பெரிய திராவிட கட்சிகளிலிருந்து வேறுபட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, NLC, ஈழ விடுதலை போராட்ட நிலைப்பாடு என சூழலியல் அரசியல், தமிழின சார்பு  வெளியுறவுக் கொள்கை என தம்மை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பு நிலைப்பாட்டினை எடுத்து போராடியது. இவ்வகையில் எழுவர் விடுதலை, மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, முல்லைப்பெரியார் உரிமை மீட்பு, கெயில் குழாய் எதிர்ப்பு என பிற திராவிட  தேர்தல்கட்சிகளின் அரசியலை மக்கள் நோக்கி நகர்த்தியது. 

இவ்விடயங்களில் எவ்வித கொள்கை நிலைப்பாடும் எடுக்காத பிற திராவிட கட்சிகள் மக்களிடமிருந்து அன்னியமாகின. கடந்த 30 வருடங்களில் 2016க்குப் பின்னரே இந்த நிலைப்பாடுகளில் திமுக நிலைப்பாடு எடுக்க முயன்றது. 2010-20வரையிலான நெருக்கடியான காலகட்டத்தில் போராட்ட அரசியலை கைக்கொண்டு நின்றது மதிமுக. சாஞ்சியில் ராஜபக்சேவை எதிர்கொள்ள தொண்டர் படையை நகர்த்தியது, ஸ்டெர்லைட்டை தடை செய்ய நீதிமன்றம் சென்றது, ப்ரஸ்ஸல்ஸில் பொதுவாக்கெடுப்பை ஈழத்திற்கு கோரியது, புலிகள் மீதான தடைக்கு எதிராக நேரடியாக வழக்காடியது, மூவர் தூக்கை ரத்து செய்ய வழக்காடியது, நியூட்ரினோவிற்கு தடை வாங்கியது என நீதிமன்றப் போராட்டங்கள் மக்கள்திரள் போராட்டத்துடன் இணைந்து நடத்தியது. கெயில் குழாய்க்கு எதிராகவும், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பிலும் மதிமுகவின் மூத்த பொறுப்பாளர்கள் திரு. கணேசமூர்த்தியும், திரு. மல்லை சத்யாவும் நேரடியாகவே பங்காற்றினர், மல்லை சத்யா சிறையும் சென்றார். இவ்வகையில் அக்கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள் போராட்ட களத்தில் எதிர்பார்ப்பின்றி பங்காற்றியவர்கள். தடா, பொடா எனும் அடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டவர்கள். மாவட்டம், பகுதி சார்ந்து மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவை எவற்றிற்காகவும் பிரதிபலனை மக்களிடத்தில் கோரியதில்லை இவர்கள். சாமானியர்களுக்காகவும், சமூக செயற்பாட்டாளர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு துணையாக நின்றார்கள். இன்றும் இம்மரபை தொடர்கிறார்கள். 

இந்த அரசியல் திராவிடர் இயக்க, பெரியாரிய அரசியலோடு நெருக்கமானது. இப்படி தனித்துவமான அரசியலை கொண்டதாக மதிமுகவையும், அதன் தொண்டர்களையும் வார்த்தார் ஐயா.வைகோ. இவ்வகை அரசியலை கையில் எடுக்காமல் போனால் மக்களிடம் வெற்றி பெற இயலாது எனும் நிலையிலேயே ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகள் இந்த அரசியல் பக்கம் நகர ஆரம்பித்துள்ளன. அவ்வகையில் பெரிய திராவிட கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்தது மதிமுக. வெற்றி, தோல்வி, பணபலம், அரசியல் அதிகாரம் என்பதைக் கடந்து எளிய மக்களுக்காக குரல் எழுப்ப தமிழகத்தின் அரசியல் தேவை 'மதிமுக'.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved