இடஒதுக்கீடுக்கு எதிராக மறுசீராய்வு மனு! உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மறுபரிசீலனை மனுவை விசாரிக்க இருக்கிறது.
முன்னதாக பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்ததால் இந்த சட்டம் அமலில் உள்ளது.
இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, ஜேபி பார்திவாலா, எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து கடந்த 2022' நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில், 3 பேர் முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி எஸ்.ரவீந்திர பட் மட்டும் இச்சட்டம் பாரபட்சமானது மற்றும் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக தெரிவித்தார். அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் மட்டும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் கருத்துடன் உடன்பட்டார்.
இந்த இடஒதுக்கீடை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது என்பனபோன்ற சில விதிமுறைகள் உள்ளன.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து தமிழக அரசு சார்பில் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12.11.2022 இல் நடைபெற்ற இக்கூட்டத்தில் 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வெளியான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் என்பது இந்திய அரசியலமைப்புச்சட்டம் சொல்லும் சமூகநீதி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், உச்சநீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையை கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும் இத்தீர்ப்பை நிராகரிப்பதாக அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, திமுக, விசிக, அகில இந்திய சமூக நீதி பேரவை உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் மே 9 ஆம் தேதி முதல் தொடங்குவதாக உச்சநீதிமன்ற வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

