🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக மாவட்ட துணைத்தலைவராக திரு.சந்திரபாபு தேர்வு!

தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தல்கள் நிறைவடைந்ததையடுத்து துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வை கடந்த சில மாதங்களாக நடத்திவந்தது. இதற்கென தலைமையால் நியமிக்கப்பட்ட குழு மாவட்டம்தோறும் நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணல் செய்தது. இதனையடுத்து இறுதி செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், கலைஞர் நூற்றாண்டு விழா என பரபரப்பாக கட்சி இயங்கிக்கொண்டிருந்த காரணத்தால் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு காலதாமதமாகி வந்தது. இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு கட்சியினரை தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறது.


இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் கம்பளதார்கள் அதிகம் இடம்பெறவில்லை என்றாலும் விருதுநகர் மாவட்ட உறவுகள் சிலர் வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இதனொருபகுதியாக விருதுநகர் வடக்கு கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணைத் தலைவராக ஏ.சந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பேரவையின் மாநில தலைவர் வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரைச் சந்தித்து ஏ.சந்திரபாபு வாழ்த்துப்பெற்றார். தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை வாரியத்தில் மாவட்ட சூப்பிரண்டென்ட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.ஏ.சந்திரபாபு அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த அமைச்சர் பெருமக்களுக்கும், நியமன செய்த வாகை சந்திரசேகர் அவர்களுக்கும், ஒப்புதல் வழங்கிய திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved