திமுக மாவட்ட தலைவராக திரு.மூர்த்தி நியமனம்!
ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தல்கள் நிறைவடைந்ததையடுத்து துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வை கடந்த சில மாதங்களாக நடத்திவந்தது. இதற்கென தலைமையால் நியமிக்கப்பட்ட குழு மாவட்டம்தோறும் நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணல் செய்தது. இதனையடுத்து இறுதி செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், கலைஞர் நூற்றாண்டு விழா என பரபரப்பாக கட்சி இயங்கிக்கொண்டிருந்த காரணத்தால் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு காலதாமதமாகி வந்தது. இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு கட்சியினரை தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிட்டு வருகிறது. இதன்படி தேனி வடக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணியின் மாவட்டத் தலைவராக எஸ்.மூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப்பெற்றார். திரு.மூர்த்தி அவர்கள் உப்புக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சாந்தி அவர்களின் இணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.மூர்த்தி அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும், ஒப்புதல் வழங்கிய திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.