🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நெகஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு! பதுங்கும் மத்திய அரசு!

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நெக்ஸ்ட் தேர்வு தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, நெக்ஸ்ட் (NEXT) தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13 தேதியிட்ட அறிவிப்பில், "சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை, 11.07.2023 தேதியிட்ட அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில், நெக்ஸ்ட் (NEXT) தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அனைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும். அதேபோல், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் எழுதப்படும் Foreign Medical Graduates Examination என்ற தேர்வுக்கு பதிலாகவும் இந்த நெக்ஸ்ட் தேர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை, எம்பிபிஎஸ் மாணவர்கள் நான்கரை வருடக் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். அந்தந்த மருத்துவப் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் நடத்தும் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெற்றதும், ஓர் ஆண்டு காலம் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்து இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மருத்துவராகப் பணிபுரியலாம் எனும் நடைமுறை இருந்தது.

அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தனியாக ‘நீட்-பிஜி’ தேர்வை எழுத வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் ‘எஃப்எம்ஜிஇ’ தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால்தான் இந்தியாவில் பயிற்சி மருத்துவராகவும், அதன் பிறகு பதிவுசெய்யப்பட்ட மருத்துவராகவும் பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது இது அனைத்திற்கும் புதியதாக நெக்ஸ்ட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து பட்டம் பெற்ற மாணவர்கள், நெக்ஸ்ட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக முடியும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் நெக்ஸ்ட் உள்ளது. மேலும், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களும் இந்த தேர்வை எழுதினால்தான் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய முடியும்.

இந்த நெக்ஸ்ட் தேர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள், மருத்துவ சங்கங்கள், மருத்துவ மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசை பொறுத்தவரை எம்பிபிஎஸ் படித்து மருத்துவராவதற்கும், முதுநிலை படிப்பில் சேர்வதற்கும் நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் என்கிறது. ஆனால், அனைவருமே முதுநிலை படிப்பு படிக்க செல்வதில்லை. ஏராளமானோர் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றதும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவர்களாக பணியாற்ற சென்று விடுவர். ஆனால், இந்த நெக்ஸ்ட் தேர்வு அதிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆங்காங்கே கடந்த சில நாட்களாக மருத்துவம் படித்துவரும் மாணவர்கள் போராட்டம் தொடங்கியிருந்தனர். இது மேலும் அனைத்து மருதுவக்கல்லூரிக்கும் பரவும், போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஏற்கனவே மணிப்பூர் கலவரம், கஷ்மீர் விவகாரம், கர்நாடக சட்டமன்ற தேர்தல் தோல்வி, அமலாக்கத்துறை இயக்குநர் அதிரடி நீக்கம், பொது சிவில் சட்டம் என பல்வேறு பிரச்சினைகள் வரிசைகட்டிக்கொண்டு நிற்பதால் கூடுதல் பிரச்சினையாக நெக்ஸ்ட் தேர்வு போராட்டங்கள் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசு தற்காலமாக பின்வாங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved