விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Aruppukkottai) முதல்வராக சிவகாசியைச் சேர்ந்த முனைவர் செ.கிளிராஜ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முனைவர் செ.கிளிராஜ், திரு. செல்வராஜ் – திருமதி லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார். சிவகாசியில் அமைந்துள்ள அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.
1998ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையிலுள்ள எஸ் பி கே கல்லூரியில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் இராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
2007ஆம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரில் உதவிப் பேராசிரியராக அரசு பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாற்றலாகி, தமிழ்த்துறைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றி வந்தார்.
தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள முனைவர் செ.கிளிராஜ், "தமிழ் இலக்கணம் அறிவோம்" மற்றும் "தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு" ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது "தமிழ் இலக்கணம் அறிவோம்" நூலுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், அந்த நூல் சென்னை கன்னிமாரா பொது நூலகம் மற்றும் தமிழக அரசின் அனைத்து பொது நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இந்நிலையில், தமிழக அரசால் அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக முனைவர் செ.கிளிராஜ் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 29.05.2026 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அருப்புக்கோட்டை – பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள இக்கல்லூரி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இருபாலரும் பயிலும் அரசு உயர்கல்வி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் பி.ஏ. (தமிழ், ஆங்கிலம்), பி.காம். (சி.ஏ.), பி.எஸ்்சி. கணிதம் உள்ளிட்ட பல்வேறு இளநிலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முனைவர் செ.கிளிராஜ் அவர்களுக்கு த.மீனாட்சி எம்.ஏ., பி.எட்., என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களும் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். த.மீனாட்சி அவர்கள் காரியாபட்டி அருகேயுள்ள பாப்பணம் அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும், மகள்களில் இருவர் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
முனைவர் செ.கிளிராஜ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதையொட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், அருப்புக்கோட்டை இராஜகம்பள சமுதாய நலச்சங்கச் செயலாளர் ஆர்.கண்ணன், கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வை.மலைராஜன் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.