🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.

உலக வரலாற்றில் பல போர்கள் மாதக்கணக்கிலும், வருடக்கணக்கிலும் நடந்திருக்கின்றன. ஆனால், வெறும் இரண்டே மணி நேரத்தில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமான கதை தெரியுமா? ஹாலிவுட் படங்களை விட மோசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் இது!

அது ஆகஸ்ட் 29, 1526. இடம்: ஹங்கேரியின் மோகாக்ஸ் (Mohács) சமவெளி.

ஒரு பக்கம் உஸ்மானியப் பேரரசின் மாபெரும் சுல்தான் 'சுலைமான் தி மேக்னிஃபிசென்ட்' (Suleiman the Magnificent / சுலைமான் அல்-கானூனி). மறுபக்கம், தங்களை 'ஐரோப்பாவின் பாதுகாவலர்கள்' என்று மார்தட்டிக் கொண்டிருந்த ஹங்கேரியப் பேரரசர் இரண்டாம் லூயிஸின் (King Louis II) மாபெரும் படை.

ஐரோப்பியர்களுக்கு எப்போதுமே ஒரு அதீத மிதப்பு உண்டு. "நாங்க தலைமுதல் கால் வரை இரும்புக் கவசம் போட்ட மாவீரர்கள்!, எங்க கனரக குதிரைப்படையை யாராலும் அசைக்க முடியாது" என்ற நினைப்பு. உஸ்மானியர்களோ நவீன ரக போரியல் உத்திகளோடு களமிறங்கியிருந்தார்கள்.

போர் முரசு கொட்டப்பட்டது. ஹங்கேரிய நைட்டுகள் தங்கள் கனரக குதிரைகளில் சீறிப் பாய்ந்தனர். உஸ்மானியப் படையின் முன்வரிசை அவர்களது தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மெதுவாகப் பின்வாங்கியது.

அவ்வளவுதான்! "ஹாஹா... சுலைமான் படை பயந்து ஓடுகிறது! விடுங்கடா அடிச்சுத் தூக்குவோம்!" என்று ஹங்கேரியப் படை வெறிபிடித்துக் கொண்டு கண்மூடித்தனமாக உஸ்மானியப் படைக்குள் ஊடுருவியது.

இதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தப்பு. உஸ்மானியர்களின் வழக்கமான தந்திர வலையில் எலி தானாக வந்து சிக்கியது!

உஸ்மானியப் படை திடீரென இரண்டாக விலகியது. அங்கே... ஹங்கேரியர்களுக்குக் காத்திருந்தது ஒரு மரணப் பொறி! சங்கிலியால் பிணைக்கப்பட்ட பிரம்மாண்டமான உஸ்மானிய பீரங்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான 'ஜானிஸரி' (Janissaries - உஸ்மானியர்களின் சிறப்புப் படை) துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! (இந்தியத் துணைக்கண்டம் அதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ஆயுதமான பீரங்கிகளைப் பாபர் பானிபட்டில் பயன்படுத்திய அதே 1526-ம் ஆண்டுதான் இது).  

ஹங்கேரியர்கள் சுதாரிப்பதற்குள் பீரங்கிகள் ஒரே நேரத்தில் நெருப்பைக் கக்கின. "பூம்... பூம்..." என்ற அந்தப் பயங்கரச் சத்தத்தில் ஹங்கேரியர்களின் இரும்புக் கவசங்கள் எல்லாம் அப்பளம்போல நொறுங்கின. துப்பாக்கிக் குண்டுகள் மழையாகப் பொழிந்தன.

வெறும் இரண்டே மணி நேரம்! ஆமாம், நீங்கள் படிப்பது நூறு சதவீதம் உண்மை. வெறும் 120 நிமிடங்களில், ஐரோப்பாவின் மாபெரும் ஹங்கேரியப் படை சுக்குநூறாக உடைக்கப்பட்டது.

தப்பியோடிய ஹங்கேரிய அரசர் லூயிஸ், ஒரு சேற்றுப் பள்ளத்தில் குதிரையோடு விழுந்து, கனமான கவசத்தின் எடையால் எழுந்திருக்க முடியாமல் மூழ்கிப் பரிதாபமாக இறந்துபோனார். தளபதிகள், ஆயர்கள், பிரபுக்கள் என ஹங்கேரியின் ஒட்டுமொத்த ஆளுமைகளும் அந்த ஒற்றை மதியப் பொழுதில் மடிந்து போனார்கள்.

ஒரு பக்கம் பானிபட்டில் பாபர் இந்தியாவை வளைத்த அதே 1526-ல், இங்கே ஐரோப்பாவின் மையப்பகுதியான சென்ட்ரல் ஐரோப்பாவின் கதவுகளை சுலைமான் எட்டி உதைத்துத் திறந்தார். அகங்காரத்தோடு களமிறங்கிய ஐரோப்பியர்களுக்கு, சுலைமான் கொடுத்த அந்த இரண்டு மணி நேர ட்ரீட்மெண்ட், உஸ்மானியர்களுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்கு மத்திய ஐரோப்பாவில் அசைக்க முடியாத ஆதிக்கத்தைக் கொடுத்தது. ஹங்கேரி என்றொரு தனி நாடு பல நூற்றாண்டுகளுக்கு உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போனது.

ஆணவம் எப்போதுமே நவீன உத்திகள் முன்னால் ஒரு நாள் மண்ணைக் கவ்வும் என்பதற்கு மோகாக்ஸ் போர்க்களம் ரத்தம் தோய்ந்த சாட்சி!

Thanks: A.I.Naseer.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved