பாராட்டு மழையில் வெள்ளிப்பதக்கம் வென்ற விபிக்ஷா!
நாமக்கல் மாவட்டம் இருளப்பட்டியைச் சேர்ந்த திரு.ரவி - திருமதி அகிலா தம்பதியரின் அன்பு மகள் விபிக்ஷா ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து விபிக்ஷா-வுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
நாமக்கல் மாவட்டம் இருளப்பட்டியைச் சேர்ந்த திரு.ரவி - திருமதி. அகிலா தம்பதியினர் நாமக்கல் அன்பு நகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அகிலா டிரான்ஸ்போர்ட் மற்றும் ஏஆர்ஏ புட்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் இத்தம்பதியினர், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு இரா.பிரதிக்ஷா, இரா.விபிக்ஷா என்ற இருமகள்களும் இரா.யஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான மூத்தமகள் இரா.பிரதிக்ஷா பிரபல மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்-இல் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளார். இளைய மகள் இரா. விபிக்ஷா நாமக்கல் நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார். மகன் இரா.யஷ்வந்த் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே ரோல் பால் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள விபிக்ஷா-வுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஊக்கமளித்து வந்தனர். இதனையடுத்து மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகைசூடி பல பதக்கங்களை வென்று பள்ளிக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான தாவி நதிக்கரையில் அமைந்துள்ள ஜம்மு நகரில் 17-வது தேசிய அளவிலான இளையோருக்கான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இரா.விபிக்ஷா இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்தமைக்காக பள்ளி நிர்வாகம், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் விபிக்ஷா-வுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் இராஜகம்பள சமுதாயத்தில் பிறந்து விளையாட்டுத்துறையில் சாதனைபடைத்து இளம் தலைமுறையினருக்கு உந்துசக்தியாக விளங்கும் விபிஷா, மேலும் பலசாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்துள்ள நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் ஆகியோர், விபிக்ஷா மற்றும் யஷ்வந்த் ஆகியோர் விளையாட்டுத்துறையில் சாதிக்க உறுதுணையாக உள்ள பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். யஷ்வந்த் ரோல் பால் விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

