🔴 LIVE | முப்பெரும் விழா 2023


12 நாளில் குடிப்பழக்கத்தை நிறுத்தலாம் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆலோசனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் "ஜெயிலர்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தினமும் குடிக்காதீர்கள் உடல் கெட்டுப் போவதுடன் குடும்பமும் கெட்டுப் போய்விடும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு குறித்து இந்த விழாவில் கலந்துகொண்ட சத்தியமங்கலம் N.பவுல்ராஜ் தெரிவித்திருப்பதாவது,


நேற்று மாலை நடைபெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக ஈரோடு மாவட்டத்திலிருந்து நண்பர்களுடன் வந்து கலந்துகொண்டேன். சன் பிக்ஸர்ஸ்க்கே உண்டான பிரமாண்டத்தோடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் திரைப்படக் கலைஞர்கள் பலரும் பேசினர். இறுதியாக பேசப்போகும் சூப்பர் ஸ்டாரின்  நீண்ட உரையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் தலைப்புச்செய்தியாகவும், பேசுபொருளாகவும் இருக்கப்போகும் அந்த சிறு நெருப்புக்காக நேரு உள்விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்காண ரசிகர்களும், அரங்குக்கு வெளியே கோடிக்கணக்கான மக்களும் காத்துக்கொண்டிருப்பதைப்போலவே நாங்களும் காத்துக்கொண்டிருந்தோம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரமபத விளையாட்டுகளை ஏற்கனவே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் எதுகுறித்து பேசப்போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியிலும் இருந்தது.

இதையெல்லாம் அறிந்திருந்தவராக இறுதியாக மைக் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவராக, “தினமும் குடிக்காதீர்கள் உடல் கெட்டுப் போய்விடும், குடும்பமும் கெட்டுப் போய்விடும். நான் தினமும் குடித்துக் கொண்டு இருந்திருந்தால் எப்போதோ மேலே போயிருப்பேன் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.


இதன் தொடர்ச்சியாக பேசியவர், குடிப்பழக்கத்தை நிறுத்துவது மிகவும் எளிது. உங்களுக்கு எப்போது குடிக்க தோன்றுகிறதோ? அந்த நேரத்தில் உணவருந்தி விடுங்கள் 12 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஆலோசனையும் வழங்கினார். மேலும் மது அருந்துபவர்களின் நிலை உணர்ந்து தன் வாழ்க்கையையே உதாரணமாக குறிப்பிட்டு, உங்களை குடிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எப்போதாவது குடியுங்கள் சந்தோஷத்திற்காக குடியுங்கள். நான் குடித்ததனால் நிறைய இழந்திருக்கிறேன். அனுபவத்தில் சொல்கிறேன் என்று விளக்கினார்.

மேலும், தினமும் குடிப்பதால் மூளை சரியாக வேலை செய்யாது. சரியான முடிவு எடுக்க முடியாது. உடல் கெட்டுப் போவதுடன் குடும்பமும் கெட்டுப் போய்விடும். மனைவி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்” என்றார். சூப்பர் ஸ்டாரின் பேச்சு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கானது என்ற போதிலும், நமது கம்பளத்தார் சமுதாயம் நிச்சயம் கருத்தில்கொள்ள வேண்டிய பேச்சாக இருந்தது என்பதாக உணர்ந்தேன்.

சென்னையிலிருந்து N.பவுல்ராஜ் (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved