🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளையராஜாவின் தோளில் சரிந்த சிவாஜிக்கு உயிர்தந்த கட்டமொம்மன்!

“ ராஜா.. எனக்கு ஏதோ அன்ஈஸியா இருக்குடா..”

சிங்கப்பூர் மேடை நிகழ்ச்சி ஒன்றில், சிவாஜி இளையராஜாவை அருகில் அழைத்து இப்படி சொன்னதும் பதறிப் போனாராம் இளையராஜா.

1999 இல் விகடனில் வெளியான சிவாஜி பற்றிய  இளையராஜாவின்  நினைவலைகள்:

சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும், அதில் விசேஷமாக அண்ணன் சிவாஜி அவர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் ஏற்பாடானது. நானும், தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தோம். 

சிவாஜியின் உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருந்தும் பிடிவாதமாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.‘அண்ணே, உடம்பு சரியில்லையென்றால், நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கூட்டத்தை சமாளித்துக் கொள்கிறோம்’ என்றேன்.

உடனே ‘ஊஹூம், சிவாஜி வாக்குக் கொடுத்துட்டான்டா! வாக்குத் தவறிட்டான் இந்த சிவாஜின்னு பேர் வாங்கணுமா? உயிரே போனாலும் மேடையில் போகட்டுண்டா!” என்றார். 

மேடையில் நட்சத்திரங்களின் தோற்றமும், பாட்டுகளும் சூடுபிடித்துக்கொண்டிருந்தன. நான் பாடி முடித்த சிறிது நேரம் கழித்து அண்ணன் சிவாஜி, என்னை அவசரமாக அழைத்தார். ‘ராஜா.. எனக்கு ஏதோ அன்ஈஸியா இருக்குடா..’ என்றார். உடனே அருகில் இருந்த டாக்டர்களை அழைக்க எழுந்தேன். என்னைப் பிடித்து நிறுத்தி, ‘வேண்டாம்…’ என்றார்.

மேடைக்கு மேலே இருந்த ஸ்க்ரீனில் சிவாஜி நடித்த காட்சிகளைத் தொகுத்துப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் அண்ணன் சிவாஜி, என் தோள்மீது சாய்ந்து, உணர்விழந்து அப்படியே முழுவதுமாக என் மேலேயே விழுந்துவிட்டார். 

நிகழ்ச்சி நடத்துபவரை உடனே அழைத்து, “அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்..” என்று பரபரத்தேன். ஆனால் நிகழ்ச்சி நடத்தியவர் நடந்துகொண்ட முறை எனக்குக் கோபத்தை ஊட்டியது. என்னுடைய பரபரப்புக்கு நேரெதிராக சாவகாசமாகப் பேசினார். “இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் மேடையில் அவருக்குச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்துவிடலாம். குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்..” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.

“இதுபோல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால், சிவாஜியின் முக்கியத்துவம் தெரியாத மூடனாக இருக்கிறானே இவன்..?!” என்று ஆத்திரமாக வந்தது.

ஏதும் அறியாத ரசிகர்கள், ஸ்க்ரீனில் சிவாஜி நடித்த படக்காட்சியில் லயித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று, ‘கிஸ்தி.. திரை.. வரி.. வட்டி’ என்ற கட்டபொம்மனின் வசனம் கேட்க, அண்ணனின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வந்தது. 

அப்படியே எழுந்து மிகவும் தெம்பாக உட்கார்ந்துகொண்டார். “எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா….?”, திரையில் கட்டபொம்மன் முழங்க, அதை முதன்முதலாகக் காணும் ரசிகன் எப்படி அதனுடன் கலந்து அதே உணர்வெய்தினானோ, அதேபோல கட்டபொம்மன், சிவாஜியின் உடம்புக்குள் புகுந்து, அவரைக் கட்டபொம்மனாக மாற்றி, சிவாஜியாக எழுப்பி உட்காரவைத்துவிட்டு, வெளியே வந்துவிட்டான். கூட்டம் ஓவென்று கத்திக் கரகோஷம் எழுப்ப, என் கண்களில் நீர் வழிந்தது!

வழிந்த கண்ணீர் சிவாஜிக்கா..? 

சிவாஜியைத் திருப்பித் தந்த கட்டபொம்மனுக்கா..?”

[நன்றி: ஆனந்த விகடன் 25.7.1999]

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved