காவல்துறை கண்களில் மண்ணைத்தூவி விட்டு கடற்கரையில் குவிந்த கம்பளத்தார்!
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபு வகுப்பினர் DNT ஒற்றைச்சாதிச் சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலின்போது தென் காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் DNT ஒற்றைச்சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆன பின்னும் இதுவரை DNT ஒற்றை சான்றிதழ் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இது தொடர்பாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அரசு இதுகுறித்து செவி சாய்க்கவில்லை.
இதனையடுத்து சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற கலைஞர் மு.கருணாநிதி வழியில் இந்த அரசு செயல்படுவதாக மார்தட்டிக்கொள்ளும் தமிழக முதல்வர் சொன்னதை செய்யாமல் இருப்பதற்கு கண்டன்ம் தெரிவிக்கும்வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி சமாதியில் மனு கொடுக்கும் போராட்டத்தை விடுதலை களம் கட்சி அறிவித்து, இன்று மெரீனா கடற்கரையை நோக்கி விடுதலைக்களம் கட்சியினர் பேரணியாக செல்ல முயன்றனர்.
இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் விடுதலை களம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி , இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைத்தலைவர் பெருமாள், ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர்ராஜ், சுப்பிரமணியன், மண்டல பொருப்பாளர் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள சமுதாயக்கூடத்தில் அடைத்தனர்.
முன்னதாக போராட்டக்காரர்களை கடந்த இரண்டு தினங்களாக தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. நேற்று காலை முதல் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே கைது செய்ய திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையின் நுழைவு வாயிலில் போராட்டக்காரர்களை கைது செய்ய காவல்துறை சென்னைக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கம்பளத்தார்கள் கடற்கரையை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.