முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மனித சங்கிலி போராட்டம்!
DNT ஒற்றைச்சான்றிதழ் கேட்டு போராடி வரும் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சாதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் DNC/DNT என்ற இரட்டை சாதிச்சான்றிதழ் முறை திமுக அரசு அமைந்தவுடன் மாற்றி DNT என்று ஒரே சாதிச்சான்றிதழ் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் 2021 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தேர்தல் பரப்புரை வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தமிழகமெங்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சீர்மரபினர் நலச்சங்கம்.
தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறும் மனிதசங்கிலிப்போராட்டம் குறித்தான வால் போஸ்டர்கள் தமிழகமெங்கும், குறிப்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் இல்லங்களின் முன் ஒட்டப்பட்டுள்ளது. நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துவரும் இப்பிரச்சினையை அரசு உடனடியாக தீர்க்காவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்த இருப்பதாக சீர்மரபினர் நலச்சங்கம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் நாமக்கல் மற்றும் சென்னை மாவட்டங்களிலும், வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தின் சார்பில் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளர் மற்றும் போயர் சமுதாய அமைப்புகளும், இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மறவர் அமைப்புகளும், திருச்சி,பெரம்பலூர்,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தரையர் மற்றும் ஊராளிக்கவுண்டர் சமுதாய அமைப்புகளும் மனித சங்கிலி போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றன.