🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பீகார் மாநிலத்தில் 65% ஆக உயரும் இடஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதி

பீகார் மாநிலத்தில் தற்போது நடைமுறையிலுள்ள 50% இடஒதுக்கீடு, 65% உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக  சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார்  அறிவித்துள்ளார். இதனால் அகில இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான குரல் மேலும் வலுப்பெற்றுள்ளது. பீகார் முதல்வரின் பேச்சு குறித்த விவரம் வருமாறு,

“நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாத நிலையில் சில சாதிகளின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகவும், சில சாதிகளின் மக்கள் தொகை குறைந்து விட்டதாகவும் (உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி) கூறுகின்றனர். இது அபத்தமான பேச்சு. நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அப்போதுதான் ஒவ்வொருவருக்குமான கொள்கைகளை வகுத்து நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். பீகார் ஏழ்மை நிறைந்த மாநிலம் என்பதால், மத்திய அரசு சிறப்பு சலுகை வழங்கினால் மட்டுமே பிகார் முன்னேறும்.

குடியரசுத் தலைவராக ஜெயில் சிங் இருந்தபோது, நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதை மனதில் வைத்துத்தான் 2019-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகாரில் நடத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தபோது நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இது குறித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கூறியது.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்,சொந்த வீடு வைத்துள்ள மக்கள் 59.13% ,  மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் 40 லட்சம், வீடு இல்லாதவர்கள் எண்ணிக்கை 63850 போன்ற புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டியுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கி 94 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் சில பணிகளை தொடங்க முடியும். 

மேலும், பிகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படும். பழங்குடியினர் இடஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். இதற்கான சட்ட மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலே கொண்டுவரப்படும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்ககான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி கூறுகையில், “பீகாரில் கல்வி அறிவு 79.70 சதவீதம் ஆக உள்ளது. பெண்களின் கல்வி அறிவு ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு தற்போது 953 பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கடந்த 2011ல் இது 918 ஆக இருந்தது. மாதம் அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக வரையறுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

பீகார் மாநிலம் இடஒதுக்கீடு வரம்பை அதிகப்படுத்தியிருப்பது பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் உரிய இடங்களைப்பெற அனைத்து சாதிகளும் முனைப்புக்காட்டும் என்பதால் உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே நாடு தழுவிய அளவில் மத்திய அரசு சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே இறுதி தீர்வாக இருக்கமுடியும் என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved