🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கணவனை இழந்த சேதுபதி மனைவிக்கு முடிசூட அனுமதி! ஜான்சிராணிக்கு அனுமதி மறுப்பு ஏன்?

இந்திய பெண்களின் கல்விக்காக தன் சொந்த பணத்தை செலவு செய்த லார்ட் டல்ஹவுசி ஏன் ஆண் வாரிசு இல்லாத இந்திய சமஸ்தானத்தை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுத்தினார்? அப்படி ஒரு யுத்தியை தமது கொள்கையாக பிரிட்டிஷார் கடைப்பிடிக்க என்ன காரணம்? என்று சென்ற முறை கேட்டிருந்தேன்.

அதற்கான விடையை நீங்கள் யோசித்தீர்களா? ஏன் என்று யூகித்துவீட்டீர்களா?

யூகிக்காமல் விட்டவருக்கு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....

1837 முதல் அலெக்சாண்டியா விக்டோரியா தான் பிரிட்டனின் அரசி.

அவருடைய அரசாட்சி காலத்தில் தான், 1848 முதல் 1856 வரை லார்ட் டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பில் இருந்தார்.

இந்த டல்ஹவுசி தான் இந்தியாவிற்கு முதலில் ரயில் வண்டி, மின் தந்தி மற்றும் தபால் துறையை அறிமுகப்படுத்தினார். இவர் தான் பொதுப்பணித்துறை என்பதை முதலில் தோற்றுவித்தார்.

ஆனால் இதை எல்லாம் விட, டல்ஹவ்சி என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது, ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாய் தான்!

காரணம் ஜான்ஸி மன்னன் கங்காதர் ராவ், 1853ரில் தன்னுடைய 56 ஆவது வயதில் புத்திரபாக்கியம் இல்லாமல் மரணம் அடைந்தார். பல ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, தாமோதர் ராவ் என்ற பெயர் சூட்ட பட்டிருந்தது. ஆனால் அந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டது.

அவருடைய மனைவி "மணிகர்னிகா" என்கிற "லஷ்மிபாய்க்கு" அப்போது 24 வயது. மன்னர் இறக்கும் தருவாயில் அவருடைய பங்காளியின் மகனான ஆனந்த் ராவை தத்தெடுத்துக் கொண்டார். இறந்த தன் மகனின் நினைவாக, அவருக்கு தாமோதர் ராவ் என்று பெயர் வைத்தார். இந்த தத்து எடுப்பை அங்கீகரிக்கக்கோரி பந்தல்கந்தில் இருந்த கிழக்கிந்திய கம்பனி அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டது.

ஏன் கிழக்கிந்திய கம்பனி இந்த தத்தெடுப்பை அங்கீகரிக்க வேண்டும்? அப்போது முகலாய பேரரசின் சார்பில் எல்லா ஆட்சி அதிகாரமும் கிழக்கிந்திய கம்பனிக்கே இருந்தது. அதனால் யார் யாருடைய வாரிசு என்று அடையாளம் கொள்ளும் அதிகாரம் கிழந்திந்திய கம்பனிக்கே இருந்தது.

மன்னர் கங்காதர் ராவ், தன் தத்துமகன் தாமோதர் ராவைப் பற்றி அனுப்பிய இந்த தகவல் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு போய் சேரும் முன்பே, தத்தெடுத்த மறுநாளே மன்னர் இறந்துவிட்டார்.

ஆக தத்தெடுப்பு நடந்திருந்தாலும், அதற்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் இன்னும் கிடைக்கப் பெறாத நிலை. அதனால் இந்த தத்தெடுப்பை கணக்கில் கொள்ளாமல், “டாக்றின் ஆஃப் லாப்ஸ்” எனும் விதியை அமல் படுத்தி, ஜான்ஸி நாட்டை பிரிட்டிஷ் பேரரசின் கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

இப்போது நமக்கு பல கேள்விகள் தோன்றலாம்....

1) மன்னன் இறந்தால் என்ன, அவர் மனைவி ராணி லக்‌ஷ்மிபாயை அரசியாய் அறிவிக்கலாமே?

2)  மன்னன் அனுப்பிய செய்தி போய்ச்சேருமுன் மன்னர் இறந்தால் என்ன, பிறகு ராணி லக்‌ஷ்மிபாய் இந்த விவரத்தை தெரிவித்து, இந்த தத்து பத்திரத்தை உறுதி செய்திருக்கலாமே?

3)  இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்திருந்தாலும் கூட ஜான்ஸியின் சுந்தந்திரத்தைக் காப்பாற்றி இருக்கலாமே, ஏன் அப்படி செய்யவில்லை?

உண்மையில் மன்னர் கங்காதர் ராவ் இறந்த பிறகு ராணி லஷ்மிபாய் தன்னுடைய தத்துப்பிள்ளைக்கு அரசு அமைக்கும் அதிகாரம் கோரி கிழக்கிந்திய கம்பனிக்கு மனு போட்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

ஏன் தெரியுமா? ராணி லக்ஷ்மிபாய் பெண் என்பதால்!

இதென்ன அநியாயமா இருக்கே!, அந்த சமயத்தில் பிரட்டனின் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவும் ஒரு பெண் தானே! என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம்.

ஆமாம், இருவருமே பெண்கள் தான்.

ராணி விக்டோரியாவை விட ராணி லக்‌ஷ்மிபாய் 9 ஆண்டுகள் இளையவர்.

ஆனால் அதுவல்ல முக்கிய வித்தியாசம்: ராணி விக்டோரியா சீர்திருத்த கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்.  அதனால் பெண் ஆட்சி செய்யலாம் எனும் சட்டத்திற்கு உட்பட்டு அவரால் ராணியாய் அதிகாரம் செய்ய முடிந்தது.

ஆனால் ராணி லக்ஷ்மிபாய் பிராமணப்பெண். அவருக்கு “ஹிந்து சட்டம்” ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை!

அதே ஹிந்து சட்டம், கணவன் இல்லாத பிராமணப் பெண்ணை தத்தெடுக்கவும் அனுமதிக்கவில்லை.

இந்த இந்து சட்டத்தை வைத்து தான் இந்தியாவின் பல சமஸ்தானங்களை கைப்பற்றினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

இந்த டாக்ரின் ஆஃப் லாப்ஸ் சட்டத்தை வைத்து ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தையும் பிரிட்டிஷார் கைபற்ற முயன்றார்கள். 

1846 இல் தன் கணவனை இழந்த பர்வதவர்தினி நாச்சியார், 1862 வரை தானே ஆட்சி செய்தார். 

பிறகு அவரின் தத்துபிள்ளையான  முத்துராமலிங்க சேதுபதி ஆட்சி அமைத்தார்.

வழக்கம் போல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதை தடுக்க முயற்சி செய்ய, அதை எதிர்த்து முத்துராமலிங்க  சேதுபதியின் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் ஆங்கிலேயர் சார்பில் வாதிட்ட வக்கீல், “இந்து லா” வை மேற்கோள் காட்டி அரசமைக்கும் அதிகாரத்தை தடை செய்ய முயன்றார்.

முத்துராமலிங்க சேதுபதியின் வழக்கறிஞர் எடுத்து விட்டார் பாருங்கள் ஒரு பிரம்ம அஸ்திரத்தை!

“நீங்கள் ஹிந்து லா என்று சொல்வது மனுஸ்மிருத்தியை அடிப்படையாக கொண்டது. மனு ஸ்மிருத்தியோ ஆரியர்களுக்கான புத்தகம். நாங்கள் திராவிடர்கள். எங்கள் ஊரில் பெண்கள் அரசியராய் அதிகாரம் செலுத்தும் மரபு உண்டு. ஆகையினால் எங்கள் திராவிட சட்டத்தின் படி முத்துராமலிங்க சேதுபதியை எங்கள் ராணி தத்தெடுத்தது செல்லுபடி ஆகும். எங்கள் திராவிடியன் லா படி முத்துராமலிங்க சேதுபதி மன்னர் ஆகும் தகுதி உடையவர் தான்”

அப்புறம் என்ன? பிரிட்டிஷ் அரசு, திராவிட மரபை ஆய்வு செய்து, காலம் காலமாக இங்கு பெண்கள் அரசியராய் இருந்தது உண்மை தான் என்று தெரிய வந்தபோது... முத்துராமலிங்க சேதுபதியின் மன்னர் பதவியை அங்கீகரிக்கும் ஆணையை வெளியிட்டது.

இப்போது சொல்லுங்கள்: ராணி லஷ்மிபாயை ஆட்சி செய்யவிடாமல் தடுத்தது, பிரிட்டிஷ் சட்டமா? இந்து சட்டமா? திராவிட சட்டமா?

"இந்து லா" என்பதை சீர்திருத்த வேண்டும் என்று நேருவும் அம்பேத்கரும் ஏன் அவ்வளவு போராடினார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள்!

ஹிந்து சட்டத்தை திருத்திய அம்பேத்கர், “கணவனை இழந்த பிறகும் ஒரு பெண்ணுக்கு தனியாக ஒரு குழந்தையை தத்தெடுக்கும் உரிமை உண்டு” என்ற மாற்றத்தை ஏன் கொண்டுவந்தார் என்பது இப்போது இன்னும் தெளிவாக நமக்கு விளங்கும்!

இப்போது சொல்லுங்கள், வில்லன்களில் பெரிய வில்லன் பிரிட்டிஷ் காரனா? அல்லது பெண்களை அடிமைப்படுத்தும் நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்களா!?

நன்றி: Dr.Shalaini

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved