🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வேகமெடுக்கும் ஜேஎன்1 வகை கொரோனா தொற்று - கொரோனாவை தடுப்பது எப்படி?

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜேஎன் 1 கொரோனா என்றால் என்ன ?

இதற்கு முன்பாக ஜேஎன் 1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. அப்படி மாற்றம் பெற்றதுதான் ஜேஎன்1.

"ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன் புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்" என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) கூறுகிறது.

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் என்ன?

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் சி. பாஸ்கர பாபு கூறியிருப்பதாவது,

நோய் தொற்று உள்ளவர்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான இருமல் மற்றும் சோர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது. 

இந்த அறிகுறிகள் முழுமையாக குறைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும். முழுமையான படுக்கை ஓய்வு எடுப்பதன் மூலம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரலாம்.

கோவிட்-19 இன் இரண்டாவது அலை போல இது ஆபத்தானது அல்ல. சில முன்னெச்சரிக்கைகள் மூலம், JN1 ஐத் தவிர்க்கலாம்,”என்கிறார் டாக்டர் பாஸ்கர பாபு.

“அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து மக்களும் மாஸ்க் அணிவதன் மூலம் இந்த நோயில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

குளிர்ந்த உணவுப்பண்டங்களை சாப்பிடக் கூடாது. சிகரெட் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருமும்போது கண்டிப்பாக கை மற்றும் கைக்குட்டையை மூடிக்கொள்ள வேண்டும்.’’ என்று கூறியுள்ளார்.

ஜேஎன்1 தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் நான்கைந்து நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டு, முழு ஓய்வு எடுத்தால் அதிலிருந்து விடுபடலாம் என்கிறார் டாக்டர் பாஸ்கரபாபு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved