கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு அமைச்சருக்கு நேரில் அழைப்பு!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் 2024-ஜனவரி 3 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது. பிறந்தநாள் விழாவை எழுச்சியோடும், சிறப்போடும் நடத்திட தமிழகம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளை பல்வேறு அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் எதிரே மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளைக் கொண்டாட ஈரோடு மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்துவருகிறது. ஆண்டுதோறும் மிகுந்த எழுச்சியோடு பிறந்த நாளை நடத்தும் நிர்வாகிகள் பல்வேறு கட்சித்தலைவர்களையும், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். இதில் செங்கோட்டையன், பெரியகருப்பன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கடந்த காலங்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் N.நல்லசிவம் ஆகியோரை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.