🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள்! - அதிமுக சார்பில் தலைவர்கள் மரியாதை!

இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் வரும் ஜனவரி 3 - ஆம் தேதி புதன்கிழமை நாடெங்கும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்களின் எழுச்சி நாயகனாகவும், இந்திய துணைக்கண்டத்தில் சுதந்திரத்தீயை பற்றவைத்து, தான் மறைந்தாலும், தான் பற்றவைத்த நெருப்பு ஆங்கிலேயர்களை இந்த மண்ணைவிட்டு விரட்டும் என்ற நம்பிக்கையோடு தூக்கிக்கயிற்றை முத்தமிட்டு, இம்மண்ணில் வீரத்தை விதைத்துச்சென்ற கட்டபொம்மனாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில், அம்மாவீரனின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் கழகத்தின் சார்பில் தலைமைக்கழக நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட நிரந்தர நிலையாணை பிறப்பிக்குமாறு அதிமுக-வின் மூத்த தலைவர் கே.கலாநிதி அவர்களின் வழிகாட்டுதலின்படி வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வரும், கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி திரு.க.பழனிச்சாமி அவர்களிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோரிக்கையை உடனடியாக தலைமையின் பார்வைக்கு கொண்டுசென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி அவர்கள், மூத்த தலைவர் கே.கலாநிதி, ஒன்றியச் செயலாளர் கண்ணன், நகரமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் ஈரையா உள்ளிட்டோரோடு கழகத்தின் பொதுச்செயலாளரைச் சந்தித்து, கழகத்தின் சார்பில் உடனடியாக நிலையாணை பிறப்பிக்க வழிவகை செய்தார்.

கழக பொதுச்செயலாளர் வெளியிட்ட நிலையாணையைத் தொடர்ந்து சென்ற ஆண்டு (2023) ஜனவரி 3-ஆம் நாள் நடைபெற்ற 264-வது பிறந்தநாள் நிகழ்வில் தலைமைக்கழக நிர்வாகிகளாக முன்னாள் அமைச்சர்கள் கே.டி.இராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரையில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் நினைவுநாளான அக்டோபர் 16 அன்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்துமாறு கழகபொதுச்செயலாளர் உத்தரவிட்டார். 


இதன் தொடர்ச்சியாக மாவீரனாரின் 265-வது பிறந்தநாளின்போதும் தலைமைக்கழக மரியாதைக்கு உத்தரவிடுமாறு கடந்த வாரம் திரு.கலாநிதி அவர்கள் கழகப்பொதுச்செயலாளருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினார்.  இக்கடிதத்தைப்பெற்றுக்கொண்ட கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வரும் ஜனவரி 3 ஆம் நாள் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு தலைமைக்கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கே.டி.இராஜேந்திரபாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோரை மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும், இதில் கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறும் பணித்துள்ளார்.

இதன்படி வரும் 3-ஆம் தேதி மாவீரன் கட்டபொம்மனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகைதரும் அதிமுக தலைவர்களுக்கு இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் சிறப்பான வரவேற்பு வழங்குமாறு மூத்த தலைவர் கலாநிதி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved