கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா! - மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கலந்துகொள்கிறார்!
கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா! - மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கலந்துகொள்கிறார்!
இந்திய சுதந்திரப்போராட்ட தியாகி, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா நாளை ஜனவரி 3-ஆம் நாள் விமரிசையாக கொண்டாடுவதற்கு தமிழகம் முழுவதும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், மாவீரன் பிறந்தநாளில் மாவீரன் சிலைக்கு மாலையிட வேண்டியும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களிடம் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு (2023) ஜனவரி 27-ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழா மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழகம் முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை தாங்கி இராஜகம்பளத்தார் அரசியல் மலர் மற்றும் கட்டபொம்மன் அகாடமியை திறந்து வைத்து விழாப் பேருரையாற்றுகையில், "கம்பளத்தார் கோரிக்கை எதுவாக இருந்தாலும் கொண்டுவாருங்கள், முதல்வரிடம் நேரில் அழைத்துச்சென்று நிறைவேற்றித் தருகிறேன்" என்று உறுதியளித்தார்.
இவ்வாறான நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து மாண்புமிகு அமைச்சர் மூலமாக தமிழக முதல்வரை நேரில் சந்திப்பதற்கு முயன்றபோது, சென்னையை மூழ்கடித்த மிக்ஜாம் புயலின் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளம், அமைச்சர் அவர்களின் தாயார் மறைவு என தொடர்ந்து காலதாமதமாகி வந்தது.
மாவீரனாரின் 265-வது பிறந்தநாள் நெருங்கிவிட்ட நிலையில், மாண்புமிகு அமைச்சரிடம் நமது கோரிக்கையை எப்படியாவது தெரியப்படுத்த வேண்டிய அவசர கதியில், விருதுநகர் திமுகழக உறவுகளின் உதவியை இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நாடியது.
இதனையடுத்து, மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேற்று முன்தினம் (31 12.2023) இரவு திரு.வை.மலைராஜன் தலைமையில் திரு.மகேஷ், கவுன்சிலர் திரு.கந்தசாமி, திரு.தங்கப்பாண்டியன், திரு.விஜயராஜ், திரு.வைகுந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தித்து, இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவிலுள்ள கோரிக்கையின் அவசரத்தை புரிந்துகொண்ட அமைச்சர், தமிழக முதல்வரிம் சொல்லி கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்களை மதுரையில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் 3-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளார். அமைச்சரின் வருகை உறுதியானதைத் தொடர்ந்து, அவருக்கு மதுரையில் சிறப்பான வரவேற்பளிக்க நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.