🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மனிதர்களைப்போல் சிரிக்கும் ஒரே விலங்கினம் கழுதைப்புலி!

முதன் முதலில் உருளைக் கிழங்கு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதுவரை அதற்குத் தமிழில் பெயரில்லை. 'மூட்டையை அவிழ்த்துக் கொட்டியவுடன் உருண்டு ஓடுகிறது, பார்க்கக் கிழங்கு போலவும் இருக்கிறது. அப்ப அதை உருளைக் கிழங்குன்னு சொல்லு' என்று காரணப் பெயர் வைத்தவர்கள் நாம்.

மிளகாய் கூட நமது பயிரல்ல. அதுவும் ஓர் இறக்குமதிப் பயிர். அதுவரை காரத்திற்கு மிளகு பயன்படுத்திய நாம் தான், மிளகு போலவே காரத்துடன் இருந்த காய்க்கு மிளகு+காய்=மிளகாய் என்று காரணப் பெயர் வைத்தோம்.

ஹைனாவுக்கு ஏன் கழுதைப் புலி என்று பெயர் வைத்தார்கள் என்று என்னைத் தேட வைத்தது. தேடியதால் கிடைத்தது.

ஹைனா, பூனைக் குடும்பத்து விலங்கு. பூனைக் குடும்பத்தின் உச்சம் புலி. 

பூனைக் குடும்பத்தின் கீழ் அடுக்கு விலங்குகளைப் போல ஹைனாவும் ஓர் அனைத்துண்ணி. 

இவற்றின் உடம்பில் புலிகள் போல் வரிகள் இருக்கும். ஆனால், முகத் தோற்றம் புலிகள் போல் கம்பீரமாக இருக்காது. பின்னங் கால்கள் கழுதைக்கு இருப்பது போல் சற்றே வளைந்து சப்பையாக இருக்கும். பற்கள் பூனைக் குடும்பத்தின் மற்ற விலங்குகள் போலவே இரையைக் குத்திக் கிழிக்க ஏதுவாக அமைந்திருக்கும். 

உடலில் புலி போல் வரிகள் இருப்பதால் புலி. பின்னங் கால்கள் கழுதை போல் இருப்பதால் கழுதை. இரண்டையும் இணைத்து 'கழுதைப் புலி' என்னும் பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். 

இதுபற்றி அறிய சில நூல்களைத் தேடிப் படித்த போது கிடைத்த சுவரஸ்யமான தகவல் ஒன்று சிக்கியது. சுஜாதா அவர்களின் 'ஏன்? எதற்கு? எப்படி?' என்ற புத்தகத்தில் கேள்வி ஒன்று இவ்வாறாக இருந்தது.

கழுதைப் புலி - கிராஸ் இனமா?

கழுதைப் புலி என்பது ஏதோ ஒரு புலி கழுதை ஒன்றுடன் உறவாடியதால் பிறந்த புதிய உயிரி என்பது போல் இருந்தது கேள்வி. 

அவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று பதில் அளித்திருந்த திரு.சுஜாதா அவர்கள் மேலும் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். 

அதீத மோப்பம் கொண்ட கழுதைப் புலிகள், அபாரமாகச் சப்தம் எழுப்பக் கூடியவை. கழுதைப் புலியின் வால் நுனி பூமியைப் பார்த்தால் பொட்டாட்ட இருக்குதுன்னு அர்த்தம். வால் சிலிர்த்து நிமிர்ந்து இருந்தால் எதற்கும் துணிந்து விட்டது எனப் பொருள். அதே வாலை வில்லாய் வளைத்து முதுகைத் தொட்டவாறு ஆட்டியவாறிருந்தால் காதல் கொண்டேன் மனநிலையில் அன்னார் இருக்கிறார் என்று அர்த்தம். 

அழிந்துவரும் மாமிசபட்சினியான கழுதைப் புலிகள் பறவைகள், பாம்பு உள்ளிட்ட ஊர்வன, சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ணுபவை. இவற்றுக்கு ஓர் சிறப்பம்சம் உண்டு. விலங்குகளால் மனிதர்கள்போல மகிழ்ச்சியை வெளிப்படுத்த சத்தமாக சிரிக்க இயலாது. ஆனால் கழுதைப் புலிகளால் சிரிக்க முடியும். 'புஹா..ஹா...ஹா...' என அடிவயிற்றில் இருந்து வாய் விட்டு சிரிக்கும் உலகின் ஒரே விலங்கு கழுதைப் புலிதான். கழுதைப் புலிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பம்சம் எனத் தெரிந்துகொள்ளலாம்.

கழுதைப் புலிகள் எழுப்பும் சப்தம் மனிதர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதுபோல இருந்தாலும், அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறு சத்தம் எழுப்புவதில்லை. இரையை கண்டுவிட்டால் தனது கூட்டாளிகளுக்கு தகவல் அளிக்க, பயம், பதற்றம், கோபத்தை வெளிப்படுத்த இவ்வாறு சப்தம் எழுப்புகின்றன. சிங்கம், புலி உள்ளிட்ட பெரிய விலங்குகள் தாக்கவந்தால் அவற்றை எச்சரிக்கவும் இதுபோல கழுதைப்புலிகள் சிரிக்கும் ஒலி எழுப்பும்.

அதிக டெசிபல் ஒலி எழுப்பும் விலங்குகளுள் கழுதைப் புலியும் ஒன்று. நடு காட்டில் இரவில் கழுதைப்புலியின் சிரிப்பைக் கேட்டால் மனிதர்களுக்கே பீதி கிளம்பும். அதிக ஸ்தாயி (high pitch) கொண்ட விலங்குகளுள் ஒன்றான கழுதைப் புலியின் ஸ்தாயி அளவு மைக்கேல் ஜாக்ஸன் போன்ற பாடகரின் உச்சஸ்தாயி அளவை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டைக்கு முன், மீட்டிங் போட்டு முன் தயாரிப்பெல்லாம் செய்யும் விலங்கு இந்தக் கழுதைப் புலி என்கிறது வேறொரு புத்தகத் தகவல். கொலை வெறியுடன் இக்கூட்டம் கிளம்பினால் எதிர்ப்படும் விலங்குகளின் கதி அதோ கதிதான்.

தமிழ் இலக்கியம் இதனை கடுவாய், தீநாய் என அழைக்கிறது.

-பகிர்வு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved