மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டோல்கேட் முற்றுகைப் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் திருச்சி நெ.1 டோல்கேட் முற்றுகைப்போராட்டத்த்தில் ஈடுபட உள்ளனர். இதன் விவரம் வருமாறு,
1) 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5,000/- வழங்க வேண்டும்.
2) அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும்.
3) சீர்மரபு வகுப்பினருக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு DNC, DNT என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் DNT-யாக வழங்க வேண்டும்.
4) 2021-சட்டமன்றத் தேர்தலின்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் DNT ஒற்றை சான்றிதழ் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும்.
5) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றக்கோரி சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பாகவும், விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு B.A.,B.L., சீர்மரபினர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் தவமணியம்மாள், விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன், தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வேட்டுவக்கவுண்டர் சமுதாய தலைவர் முனுசாமிக் கவுண்டர் ஆகியோர்கள் தலைமையில் விவசாயிகள் மற்றும் 68 சாதி சமூகத்தினர் ஒன்றிணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருச்சி (சமயபுரம்) நெ.1 டோல்கேட் முற்றுகைப்போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில் நாமக்கல்,கரூர், திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் கலந்துகொள்கின்றனர்.