🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித்தருக - துரைவைகோ அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் வகுப்பினருக்கு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி மறுமலர்ச்சி திமுக முதன்மைச்செயலாளர் துரைவைகோ தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதுகுறித்து மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களை அவரது இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று (05.02.2024) காலை சந்தித்து, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோரிக்கை மனுவின் விவரம் வருமாறு:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர்.

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள  ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலகாரர், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு உரிமைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு பழங்குடியினர்’ DNTs (Denotified Tribes) எனவும், மாநில அரசு உரிமைகளை பெறுவதற்கு ‘சீர்மரபு வகுப்பினர்’ DNCs (Denotified communities) எனவும் ‘இரட்டை சாதிச்சான்றிதழ்’ வழங்கும் அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையைப் போக்கிட, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்புமிக்க அண்ணன் தளபதி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணன் தளபதி அவர்கள் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனவே, இச்சமூக மக்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, உடனடியாக அரசாணை வெளியிட்டு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைத்து, மாண்புமிகு முதல்வர் அவர்களும் இது சம்பந்தமாக ஏற்கனவே  தேர்தல் வாக்குறுதி அளித்து இருக்கிறார். எனவே இந்த கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன், மற்றும் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
05.02.2024

டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் கோரி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சமுதாயத்தினர் 2014 ஆம் ஆண்டுமுதல் பலகட்டப்போராட்டங்களை நடத்தியதோடு, அரசியல் கட்சித் தலைவர்களையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்து முறையிட்டு வந்த நிலையில், முதல்முறையாக அரசியல் கட்சித்தலைவர் ஒருவர் 68 சமுதாய பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டது இதுவே முதல்முறை. 

தன்னிடம் வரும் பொதுமக்கள் பிரச்சினைகளில் உள்ள நியாயத்தை தெரிந்துகொண்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து அக்கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு  கேட்டுக்கொள்வது திரு.துரைவைகோ அவர்களின் இயல்பு. வளர்ந்துவரும் இளம் அரசியல் தலைவர்களில் சாமானிய மக்களால் கவனிக்கப்பட்டு வரும் தலைவர்களில்  திரு.துரைவைகோ முதன்மையானவர். அரசியலில் அடுத்தடுத்த உயரங்களை அவர் தொடும்போது அவரின் எளிமையும், செயல்வேகமும் சாமானிய மக்கள் விரும்பும் ஆளுமை மிக்க தலைவராக உயர்வார் என்பதில் சந்தேகமில்லை. 

68 சமுதாய மக்களின் கோரிக்கையை உடனடியாக அதிகார பீடத்திற்கு எடுத்துச்சென்று தீர்வுகாண முயன்றுள்ள திரு.துரைவைகோ அவர்களுக்கு சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved