🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காட்டு வளங்களை சுரண்டும் அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி.

காடுகள் என்கிற அகராதி பொருளுக்கு எவையெல்லாம் பொருந்துமோ அவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது.

காடுகள் என்றால் என்ன? என்று நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. காடு என்ற சொல்லின் பொருள் ஏதும் மாறவில்லை. 1996 ஆம் ஆண்டு கோதவர்மன் மற்றும் இந்திய அரசுக்கு இடையிலான வழக்கின் தீர்ப்பை (T.N. Godavarman Thirumulkpad vs Union Of India & Ors) மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றம், இந்த தீர்ப்பின்படி தான் காடு என்பதற்கான பொருள் இருக்கிறது என உறுதிப்படுத்தியிருக்கிறது.

2023 வனச்சீர்திருத்த சட்டம் சொல்வதென்ன?

2023ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனச்சீர்திருத்தச் சட்டம் காடு என்பதற்கான வரையரையை மாற்றுகிறது. காடுகள் என்பவை மத்திய, மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட காடுகளைத் தவிர, காடுகளுக்குரிய குணநலன்களோடு இருக்கும் நிலப்பரப்பைக் காடு என வரையறுக்க முடியாது என கூறுகிறது. இவற்றை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு சில தளர்வுகளையும் வழங்குகிறது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்ட வடிவமானது. இச்சட்டத்திற்கு எதிராக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் வனத்துறை அலுவலர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதில் பிப்ரவரி 19ம் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காடு என்றால் என்ன என்பதற்கான வரையறையை தெரிந்து கொள்ள, 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது.

1996 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறுவது என்ன?

இந்த தீர்ப்பின் படி வனம் இருக்கும் நிலங்கள் அரசு அல்லது தனியார் என யாருடைய வசம் இருந்தாலும், வன பாதுகாப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதே. வனம் இருக்கும் நிலங்களை வேறு தேவைகளுக்காக மத்திய அரசின் அனுமதியின்றி எந்த மாநில அரசும் பயன்படுத்தக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மீறும் வகையில் வனச்சீர்திருத்த சட்டம் 2023 இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் வன ஆர்வலர்கள்.

நீலகிரி மலைக்காடுகளுக்கான வழக்கு: 

நாடு தழுவிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த 1996 ஆம் ஆண்டு வழக்கு, தமிழ்நாட்டிலிருந்து தான் தொடரப்பட்டது. இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியிருப்பது, "1969 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், ஜமீன்தார்களுக்கு சொந்தமாக இருந்த 50,000 ஹெக்டேருக்கு மேலான நிலம் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த நிலத்தை யாருக்கு கொடுக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்பாகவே பல பேர் ஆக்கிரமிப்பு செய்தனர். அந்த பகுதிளில் இருந்த வனம் பல இடங்களில் அழிக்கப்பட்டது. இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு அந்த இடத்துக்கு சொந்தமான கோதவர்மன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜமீன் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது காடுகளாக பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அங்குள்ள காடுகள் மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி காடுகள் என்று வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற பகுதி மட்டுமல்ல காடுகள் என்கிற அகராதி பொருளுக்கு எவையெல்லாம் பொருந்துமோ அவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு இந்திய காடுகளை பாதுகாக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக கருதப்படுகிறது.

ஆனால் 2023 ஆம் ஆண்டு இந்திய வனப் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வனத்துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளில் வன சட்டப்படி பாதுகாப்பதில் இருந்து விலக்கு கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து பல முன்னாள் வனத்துறை அலுவலர்கள் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் தான் 1996 அம் ஆண்டு கோதவர்மன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது" என விளக்கியதோடு, இது காடுகளை பாதுகாப்பதில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாகவும் கூறினார்.

 கோதவர்மன் வழக்கு கூறும் காடு எது?

இந்தியாவில் காடு என்ற வரையறையின் கீழ் வரும் நிலங்களைக் காணலாம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி (Reserve Forest) மத்திய அரசு அல்லது மாநில அரசால் பல்லுயிர் பெருக்கத்திற்கான நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட வனங்கள். வனத்தைச் சுற்றிலும் இருக்கும் Buffer Zone எனப்படும் இடையகக் காடுகள். மேலும் தனியார் வசம் இருக்கும் நிலங்களில் உள்ள காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. கோதவர்மன் வழக்கின் தீர்ப்பானது காடுக்குரிய குணநலன்களோடு எந்த நிலப்பகுதி இருந்தாலும் அது காடுதான் என திட்டவட்டமாக கூறுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மூலம் எஞ்சி உள்ள காடுகளை பாதுகாக்க முடியும் என வன ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் நாடு முழுவதும் 1.97 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள காடுகள் வனத்துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளன.

அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு சீர்திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல், வனவிலங்கு உயிரியல் பூங்கா உருவாக்குவது, காடுகளுக்குள் சூழல் சுற்றுலா செல்வது எல்லாம் காடுகளை பாதிக்காத விஷயங்களாக கருதப்படுகிறது.

தற்போதுள்ள தீர்ப்பால் இவற்றுக்கெல்லாம் அனுமதி பெற்று தான் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆகவே இது சிறப்பு மிக்க தீர்ப்பாக இயற்கை ஆர்வலர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது என ஓசை காளிதாஸ் தெரிவிக்கிறார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved