🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் அகாடமி 2024-25 கல்வியாண்டு இலவச பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை!

கட்டபொம்மன் அகாடமி 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை!

வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி, சென்னை சார்பில் 2024-25 கல்யாண்டுக்கான குரூப் சர்வீஸ் தேர்வு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி திறந்துவைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. முழுக்க முழுக்க இராஜகம்பள சமுதாய சொந்தங்களிடம் மட்டுமே நன்கொடைபெற்று கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த மூன்றடுக்கு கட்டிடத்தை சமுதாய மாணவர்களை பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்தல் மற்றும் திறன் மேம்பாட்டுப்பயிற்சி வழங்குதல் என முழுமுழுக்க இளம் தலைமுறையினரின் கல்வி, பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்திய பயன்பாடு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதற்கட்டமாக, போட்டித்தேர்வு பயிற்சியில் முன் அனுபவமும், திறமையும், சிறந்த வெற்றிவாய்ப்புகளையும் வழங்கிவரும் பயிற்சி மையத்தோடு இணைந்து பயிற்றுவிக்கும்போது மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைக்கும் என்ற அடிப்படையில் சென்னையிலுள்ள மேத்தா ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து முதல் முயற்சியாக கடந்த 2023-24 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்பட்டு, எதிர் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.

வெற்றிகரமான முதலாமாண்டு முடிவுறும் தருவாயில் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு பயிற்சிக்கான அறிவிப்பை சமுதாய நலச்சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. 

அதன்படி, தமிழ்நாடு அரசுத்தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 முதல் குரூப்-8 வரையிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அரசுப்பணிக்கு செல்ல விரும்பும் இராஜகம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியர்களிடமிருந்து 2024-25 ஆம் கல்வியாண்டுக்காக கட்டபொம்மன் அகாடமி மற்றும் மேத்தா ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து வழங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. 

இலவச பயிற்சி தொட்டிய நாயக்கர் (சில்லவார், கொல்லவார், எர்ரகொல்லவார், தோக்கலவார், இராஜகம்பளம்) பிரிவினருக்கு மட்டும்.

இலவச பயிற்சியில் சேரவிரும்பும் மாணவ-மாணவியர் தங்களது சுயவிவரங்களை (Profile) vkrsnsgroup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசித்தேதி :10.04.2024

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved