🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க சமுதாயத் தலைவர்கள் தீவிர முயற்சி!

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் ஆகியோருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் குறித்து வலியுறுத்தினர். இதன் விவரம் வருமாறு,

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சமூகங்கள் டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் கேட்டு நீண்டகாலம் போராடி வருகின்றன. ஆளும்கட்சியான திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொழுது 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டிஎன்டி சமூகங்களுக்கு ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்கப்படுமென்று அக்கட்சியின் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் வாக்குறுதியளித்தார். ஆனால் சட்டமன்றத் தேர்தலி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஒற்றைச்சான்றிதழ் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரே தாளில் DNC/DNT என்று சாதிச்சான்றதழ் வழங்க உத்தரவிட்டு, வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக தம்பட்டமடித்துக்கொண்டது. உண்மையில், தங்களுக்கு வழங்கும் சாதிச்சான்றிதழ் DNT என்று மட்டுமே வழங்க வேண்டும் என்பதே சமுதாயங்களின் ஒற்றைக் கோரிக்கை என்ற நிலையில், அரசு DNC/DNT என்று வழங்க உத்தரவிட்டதை ஏற்கமுடியாது என்று அரசின் உத்தரவை DNT சமூகங்கள் நிராகரித்தன.


இந்நிலையில், அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வரும் நிலையில், சீர்மரபினர் நலச்சங்கம் மீண்டும் டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆளும்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும்வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், ஆளும்கட்சியின் ஆதரவு வட்டங்களைச் சேர்ந்த 'லாபியிஸ்டு'களைச் சந்தித்து டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்க அரசை வலியுறுத்துமாறு சீரமரபினர் நலச்சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சீர்மரபினர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜு அவர்களின் தலைமையில் தலைமை ஆலோசகர் காசிமையன், எஸ்.இராமராஜு உள்ளிட்டோர் நேற்று (20.05.2025) திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார், மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலைவர் நீதியரசர் பாரதிதாசன் மற்றும் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved