🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக ஒன்றியப் பொறுப்பாளராக ஆர்.நாகேஸ்வரன் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராக திரு.ஆர்.நாகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் விபரம் வருமாறு,

தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இதற்காக, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் பேரில் அமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்துவருகிறது. இதனொரு பகுதியாக, தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து கனிமொழி,  ஆ.ராசா, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறது. 

மண்டலப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்புக்குழுவினரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட, ஒன்றிய, நகர்புற அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அக்கட்சி முடிவு செய்து,  தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

அதனடிப்படையில், ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அந்தியூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராக ஆர்.நாகேஸ்வரன் நியமிக்கப்படுவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த நியமன உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்தியூர் குந்துக்காலம்பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளங்கலைப் பட்டதாரியான நாகேஸ்வரன், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தீவிரப்பணியாற்றி வருபவர். அந்தியூர் செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்துவரும் நாகேஸ்வரன், சமுதாய அமைப்புகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் களம்கண்ட அனுபவமும், கட்சியின் ஒன்றியப் பொருளாளராகத் தொடர்ந்து பத்தாண்டு காலம் பணியாற்றிய அனுபவமும் மிக்க நாகேஸ்வரனின் துணைவியார் திருமதி ராஜேஸ்வரி ஒன்றியக்குழு உறுப்பினராக கடந்த 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.நாகேஸ்வரன் அவர்களுக்கு ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கி, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட  இராஜகம்பளத்தாருக்கு உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்க அடிகோலியுள்ள  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved