பாஜக கரூர் மாவட்டச் செயலாளராக வெங்கடாச்சலம் நியமனம்!
பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராக தி நாமக்கல் டீச்சர்ஸ் வித்யாஷ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளித் தலைவர் கே.வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விபரம் வருமாறு,
கரூர் மாவட்டம் வடக்கம்பாடியைப் பூர்வீகமாகக் கொண்டவர் கே.வெங்கடாச்சலம். இவர் தற்போது தாந்தோன்றிமலை அருகேயுள்ள ஒத்தையூர் பால்வார்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கரூரில் ஶ்ரீ மகாலட்சுமி டையிங் & டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் வெங்கடாச்சலம், தி நாமக்கல் டீச்சர்ஸ் வித்யாஷ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைவராகவும் இருந்துவருகிறார்.
2016-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் சுயோட்சை வேட்பாளராக களமிறங்கிய வெங்கடாச்சலம், 2021-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மாவட்டத் தொழில்துறைத் தலைவராகவும், அதனைத்தொடர்ந்து தாந்தோன்றிமலை மேற்கு ஒன்றியத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபின் 2026 இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அக்கட்சி முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்துவருகிறது. இதன்படி கட்சியின் பிரதான அமைப்பில் ஒரு மாவட்டத் தலைவரும், நான்கு துணைத்தலைவர்களும், மூன்று பொதுச்செயலாளர்களும், ஆறு செயலாளர்களும், ஒரு பொருளாளரும் நியமிக்கப்படுகின்றனர். இதன்மூலம் அனைத்து சமூகங்களுக்குமான வாய்ப்புகளை அக்கட்சி வழங்குகிறது.
இதன்படி கரூர் மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாவட்டத்தலைவர் வெளியிட்டுள்ளார். மாநிலத் தலைவர் ஒப்புதலோடு வெளியாகியுள்ள இப்பட்டியலின்படி கே.வெங்கடாச்சலம் அவர்கள் கரூர் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தேனி மாவட்ட பாஜக பொருளாளராக பொன் ஆனந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளராக ஆர்.பி.பூபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கரூர் மாவட்டச் செயலாளராக கே.வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கரூர் மாவட்டச் செயலாளராக திரு.கே.வெங்கடாச்சலம் நியமனம் செய்யப்பட்டதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் அவர்களுக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கிய பாஜக மாநிலத்தலைவர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

