மாவட்டச் செயலாளர். பொருளாளர்களுக்கு சமுதாயம் சார்பில் மரியாதை!
புதிதாக நியமனம் செய்யப்பட்ட பாஜக மாவட்ட நிர்வாகிகளுக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர்கள் நேரில் வாழ்த்து. இதன் விபரம் வருமாறு,
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இதன் பயனாக பிரதிநிதித்துவ தேர்தல் ஜனநாயக அரசியலில் இதுவரை உரிய வாய்ப்புகள் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருந்த இராஜகம்பளத்தார் சமுதாயதைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அளவிலான வாய்ப்புகளை வழங்கிவருகிறது.

தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்திகொண்ட இராஜகம்பள சமுதாய மக்கள் தமிழகம் முழுவதும் பரவலாக 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில், சொந்த செல்வாக்குள்ள உள்ளாட்சி மட்டத்திலான பொறுப்புகள் தவிர்த்து வேறு எந்தப்பதவிகளையும் இராஜ கம்பளத்தார்க்கு திராவிடக் கட்சிகள் வழங்குவதில்லை. இரண்டு மூன்று தலைமுறைகளாக கட்சியில் தொடர்ந்து தொண்டனாகவே இருந்துவரும் கம்பளத்தார் சமுதாயப் பிரதிநிதிகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற சிந்தனை அக்கட்சிகளின் தலைமைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பெருஞ்சாதிகளை மையப்படுத்தியே தமிழகத்தை இருதிராவிடக்கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தை பங்குபோட்டு வரும்நிலையில், வாரியங்கள், நாடாளுமன்ற மேலவை உள்ளிட்ட கட்சித் தலைமையால் தேர்வு செய்ய வாய்ப்புள்ள இடங்களிலும் பெருஞ்சாதி அல்லது மத சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தொட்டிய நாயக்கர் போன்ற சாதி சிறுபான்மையினருக்கு வழங்குவதில்லை என்ற மனக்குமுறல் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் நீண்டநாட்களாக இருந்துவருகிறது.

இந்நிலையில், மோடிதலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் வடமாநிலங்களில் பரிட்சயதார்த்த முறையில் செய்துபார்த்து வெற்றியடைந்த “ஸோசியல் எஞ்சினியரிங்” முறையை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இதுகுறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அரசியல் அதிகார வாய்ப்பற்ற சிறுபான்மை சாதி சமூகங்களையும் அரசியல் மையப்படுத்துவதில் அக்கட்சி முதன்மைப்பங்காற்றி வருகிறது. அந்தவகையில் கட்சியிலுள்ள பல்வேறு அமைப்புகளில் எல்லா சாதியினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நிர்வாகிகளை தேர்வு செய்கிறது. இதன் மூலம் அரசியலில் நீண்டகாலம் பங்கெடுத்தும் போதிய வாய்ப்புகள் வழங்காமல் பிறக்கணிக்கப்பட்டிருந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத் தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான வாய்ப்புகளை அக்கட்சி வழங்கிவருகிறது.

இதன்படி சமீபத்தில் மேற்கொண்டுவரும் மாற்றங்களின் அடிப்படையில் தேனி மாவட்ட பாஜக பொருளாளராக பொன் ஆனந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆர்.பி.பூபதி, கரூர் மாவட்டச் செயலாளராக கே.வெங்கடாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் ஆளும் தேசியக்கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்புகளை வழங்கியுள்ள பாஜக தலைமைக்கு சமுதாய அமைப்புகள் ஏற்கனவே நன்றி தெரிவித்துள்ள நிலையில், புதிய நிர்வாகிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் நேறி சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவ்வகையில் தேனி மாவட்ட பாஜக பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பொன் ஆனந்தன் அவர்களை அவரது சொந்த ஊரான சின்னமனூரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார இராமராஜ் பொன்னாடை அணிவித்து, முப்பெரும்விழா மலரை வழங்கி வாழ்த்துக்கூறினார். அதேபோல் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.பி.பூபதி அவர்களுக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, வழக்கறிஞர் பி.பழனிச்சாமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சுரேஷ்குமார், சுப்பிரமணியன், ஆறுமுகச்சாமி, சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

